சொல்லிலக்கணம்

இன்று முதல் சொல்லின் இலக்கணம்...

 சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.

 எல்லா சொல்லும் பொருள்குறித் தனவே - தொல்காப்பியம்.
 அக்கருத்தின் நிகழ்பொருள் திணை எனப்படும். அத்திணை உயர்திணை, அஃறிணை என இரு வகைப்படும்.

 உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே - தொல்காப்பியம்

 மக்கள் உயர்திணை... மற்றவை அஃறிணை...

அவ்வளவே...

இனி இதிலென்ன சிறப்பு எனக் கேட்போர் உண்டெனின், கட்டை விரலை ஆண்பால் என்றும் சிறுவிரலைப் பெண்பால் எனறும் மனைவியைக் குறிக்கும் மூன்று சொற்களில் ஒன்று ஆண்பால் ஒன்று பெண்பால் ஒன்று அலிப்பால் என்றும் வழங்கும் மொழிகள் இங்கு உண்டு என்பதை ஓர்க... இதனையே

"கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சிலஇலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ''

என்று இலக்கிண வரம்பிலா மொழிகளை பரஞ்சோதி முனிவர் குறித்தார் என்க..

இனி இச்சொற்கள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்

என்ற மூன்று அடிப்படைப் பிரிவினவாம்...

உரிச்சொல் என்ற ஒன்றும் உளதாம் என்க...

உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங்க வைக்கும் சொல்.
எ.காட்டு: உறுமீன், சால உண்டான்.


பெயர்ச்சொல்
ஆறு வகைப்படும்.

பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்


 வினைச்சொல்:

தொழில் அல்லது செயலைக் குறிக்கும் சொல்.
எ.கா: நீந்துகிறது.


 இடைச்சொல்:

வாக்கியங்களைக் கருத்தால் இணைக்கப் பயன்படும் சொற்கள்.

எ.கா: உம், ஆனால், ஆகையால், ஏனெனில்


 வட சொல்:

கிரந்த எழுத்துக்களைக் கொண்ட சொல்.
எ.கா: விஷம், ஹனுமான்.

 திசைச் சொல்:

பிறமொழிகளில் உள்ள சொற்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்துதல்.

எ கா: பாக்கி(அரபு), கச்சேரி (இந்தி), பென்சில் (ஆங்கிலம்), அலமாரி(போர்த்துகல்).


இனி திசைச்சொல்லும் வடசொல்லும் தமிழல்ல என்பதனாலும், தமிழின் இலக்கணத்திற்கு அவை ஒவ்வாதவை என்பதாலும், அவை விலக்கப்பட வேண்டியவை என்பதாலுமே தனியாகக் காட்டப்பட்டன என்க...

 எடுத்துக்காட்டுக்கு பந்து என்ற குற்றியலுகரம் ஒலிப்பது போல் இந்து என்ற வடசொல் ஒலிக்காது முற்றியலுகரமாக ஒலிப்பதைக் காண்க... இதனால் குற்றியலுகரப் புணர்ச்சி இலக்கணத்திற்கு இந்து ஒவ்வாது நிற்பதைக் காண்க...
பந்து + இல்லை = பந்தில்லை என்று வர,

இந்து + இல்லை = இந்தில்லை என்று வராமல் இந்துவில்லை என்று மாறி இலக்கணத்தைக் குழப்புதல் காண்க...

இதனால்தான் பிற மொழிச் சொற்களை வழங்குதல் கூடாது என்று அறிஞர் பலர் காக்கைகளாய் கரைந்து நின்றனர் என்று உணர்வோம்....


இனி,

உயர்திணையானது ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.

அவன், வந்தான் - உயர்திணையாண்பால்

அவள், வந்தாள் - உயர்திணைப் பெண்பால்

அவர், வந்தார் - உயர்திணைப் பலர்பால்

பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண் பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.
—-

அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.

அது, வந்தது - அஃறிணையொன்றன்பால்
அவை, வந்தன - அஃறிணைப் பலவின்பால்.

இனி, வினைச்சொல்லாவது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாம்

 வினைச்சொல் ஆறு வகைப்படும்... அவை

1. தெரிநிலை வினைமுற்று - நடந்தாள், உண்கும், பெற்றான்...

2. குறிப்பு வினைமுற்று - பொன்னன், கரியன்.

3. தெரிநிலை பெயரெச்சம் - நடந்த, உண்ட, புகட்டும்....

4. குறிப்புப் பெயரெச்சம் - நல்ல, பெரிய....

5. தெரிநிலை வினையெச்சம் - ஆற்றி, உண்டு, பெறாது ....

6. குறிப்பு வினையெச்சம் - மெல்ல, சரியாய், இன்றி, கனிவாய்...

இனி, இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய மெல்ல

எதிர்மறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.


நடவான் நடவாத நடவாது
இலன் இல்லாத இன்றி

வியங்கோள் வினைமுற்று

க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.

வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.

ககரவிகுதி - வாழ்க
இயவிகுதி - வாழிய
அகரவிகுதி - வர
அல்விகுதி - ஒம்பல்

வாழிய என்பது, ஆ வாழி, தமிழ் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

வா  வருக,
ஓர்தல்  ஓர்க
ஒம்பல்  ஒம்புக,
எனல்  என்க

சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே
நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.

எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க  என்று அல் எனும் இடைநிலை பெற்று வரும்.

கட்டுரை எழுதும்போது ஒரு செய்தியைச் சொல்லி முடித்துவிட்டு வேறொரு செய்திக்குப் போகும்போது "நிற்க." என்ற வியங்கோள் வினைமுற்று போடுதல் கட்டுரையை மேலும் சிறப்பிக்கும்...

வினைப்பகுப்பு:

தன்வினை / பிறவினை

தன்வினையாவது தன் எழுவாயில் உள்ள  செய்வானின் தொழிலை உணர்த்தி நிற்கும்  வினையாம் இத்தன்வினை  செய்வானின் வினையெனப்படும்.

தச்சன் கோயிலைக் கட்டினான், சாத்தனை யடைந்தான்...
 பிறவினையாவது தன் எழுவாய் செய்வான் அல்லாத பிறரின் தொழிலை உணர்த்தி நிற்கும் வினையாம்.

பாலத்தைக் கட்டுவித்தான்.

அரசன் தச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்...
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பல அறிஞர்களுக்கு தமிழைப் பயிற்றுவித்தார்...

இங்கு கட்டுவித்தான், பயிற்றுவித்தார் எனபன பிறவினைகளாம்....

தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் சில வினைச்சொற்கள்:

முதனிலை தன்வினை பிறவினை
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்


இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.

முதனிலை தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான் அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான் கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான் வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான் கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்

 வினையியல் முற்றிற்று...

இடையியல்:

இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
 இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.

எடுத்துக்காட்டு

ஐயோ இறந்தான்

ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.

கொன்றான் கூகூ

என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.

மற்றொன்று

மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.

குழையன்

அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது
〰〰〰〰〰

 இடைச்சொல் வகைகள்:

1) வேற்றுமை உருபுகள்

2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்

3) சாரியைகள்

4) உவம உருபுகள்

5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்

6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்

7) செய்யுளில் அசைநிலையாக வருபவை

8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை

 வேற்றுமை உருபுகள்

முதலில், இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம். வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்ப பொருள் வேறுபடும், அது வேற்றுமை எனப்படும். வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து வருவதில்லை.

எடுத்துக்காட்டு

1) கண்ணன் கண்டான்
2) கண்ணனை (க்) கண்டான்

முதல் சொற்றொடரில் கண்ணன் பார்க்கிறான், இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான்.

முதல் சொற்றொடரில் கண்ணன் எழுவாய்; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள்.

இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு.

இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம்.

இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது.

எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம்.
〰〰〰〰〰〰〰

வேற்றுமை உருபுகள்:
1)
முதல் வேற்றுமை
(எழுவாய் வேற்றுமை)
-------
2)
இரண்டாம் வேற்றுமை

3)
மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
4)
நான்காம் வேற்றுமை - கு
5)
ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
6)
ஆறாம் வேற்றுமை - அது, உடைய
7)
ஏழாம் வேற்றுமை - கண்
8)
எட்டாம் வேற்றுமை - (விளி வேற்றுமை)
-------
எடுத்துக்காட்டு

2) கண்ணனைக் கண்டான் - ஐ - உருபு
3) வாளால் வெட்டினான் - ஆல் - உருபு
4) கூலிக்கு வேலை செய்தான் - கு - உருபு
5) மலையின் வீழ் அருவி - இன் - உருபு
6) கம்பரது பாத்திறம் - அது - உருபு
7) அவையின் கண் இருந்தான் - கண் - உருபு
இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து (இறுதியில்) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும்...
〰〰〰〰〰〰〰

உவம உருபுகள்:

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம்.

உவமை

ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறும்போது அது உவமை ஆகிறது.

எடுத்துக்காட்டு

மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது.

இத்தொடரில் தேன் - உவமை; மொழி - பொருள்; ‘போன்ற’ என்பது உவம உருபு.


உவம உருபுகள்

போல,
புரைய,
ஒப்ப,
உறழ,
மான,
கடுப்ப,
இயைய,
ஏய்ப்ப,
நேர்,
நிகர்,
அன்ன,
இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது.

இன் என்பதும் ஒரு உவமவுருபு... இவை போல இனனும் பல உண்டு என்க...

இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு

தளிர் புரை மேனி (தளிர் போலும் மென்மையான உடல்)

செவ்வான் அன்ன மேனி (செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல்)

வில்லின் புருவம் (வில்லைப் போன்ற புருவம்)
〰〰〰〰〰

இனி பொருளை உணர்த்து சில சிறப்பான இடைச்சொற்களைக் காண்போம்... இவை ஓரெழுத்து ஈரெழுத்துச் சொல்லானாலும் பாரிய பொருள் வேறுபாட்டை உணர்த்தும்.... பாட்டெழுதையிலும், உரைநடையிலும், பேச்சிலும் இவை மிகவும் பயன்படும்... இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்....

〰〰〰〰〰

ஏ எனும் இடைச்சொல்:

ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.

தேற்றம்:
உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.

வினா
நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா

எண்:
நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.

பிரிநிலை:
அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.

எதிர்மறை:
நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.

இசைநிறை:
’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.

ஈற்றசை:
’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.

〰〰〰〰〰〰〰〰
 நத்தை யம்மா நத்தை யம்மா எங்கே போகிறாய்?
அத்தை குளிக்க தண்ணீர் குடம் கொண்டு போகிறேன்
எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான் வேண்டுமானால் பார்த்துக் கொண்டிரு...

அழ.வள்ளியப்பா

 நத்தையம்மா பாடலில் பத்தே நாள்தான் என்பதில் உள்ள ஏ எனும் இடைச்சொல் உணர்த்தும் நுட்பமான பொருளைக் காண்க...



ஓ எனும் இடைச்சொல்:

ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.

(எடுத்துக்காட்டு)

1. ஒழியிசை:

படிக்கவோ வந்தாய்.

இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை.

2. வினா:

அவளின் மகனோ. இங்கே  மகனோ என
வினாப் பொருளைத் தருதலால் வினா.

3. சிறப்பு:
சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும்.

உயர்வு சிறப்பு:

ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு;

இழிவு சிறப்பு:

ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு

4, எதிர்மறை:
அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை

5. தெரிநிலை
ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை.

6, கழிவு:
தமிழர் தம்மைத் தமிழர் என்று என்றைக்குத்தான் உணர்வாரோ...
என்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்

7.பிரிநிலை:
இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவனைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை

8. அசை நிலை:
காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் ஓசைக்காக நிற்றலால் அசை நிலை.


மேலே நாம் ஏகார ஓகார இடைச்சொற்களைக் கண்டோம்...

ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் வேறுபாட்டுப் பொருளைத் தரும்.

வேறுபாட்டாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.



ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் - வீட்டிலாயினுங் பள்ளியிலாயினும் இருப்பேன்
தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடு

 அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.


இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.


காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்

 முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.


காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்

முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும் வழங்கும்.

 வாளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.

வாளா விருந்தான், சும்மா வந்தான்


உம் என்ற இடைச்சொல் பேச்சில் பெருவழக்காய் நிற்பதைக் காண்க... அது கையறு நிலையை உணர்த்தி நிற்கும்

"ஆமா... அப்படியே நீங்க
குடுத்துட்டாலும்......"

.அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.

அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்
எக்கொற்றன், கொற்றனா, யாவன்.

கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

எ-டு.

ஐயம்:

முகங்கொல் மதியம்கொல். இற்கே நிலவோ முகமோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.

அசைநிலை:
கற்றதனா லாய பயனென்கொல்.
இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை

அசை என்பது ஓசைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் தராத இடைச்சொல்லாம்..

அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கேள்; என்னும் பொருளிலும், அசையாகவும் வரும்.

ஒன்று சொல்வேன் கேள் - அம்ம வாழி ’’தோழி“

அசை - ’’ அது மற்றம்ம’’

 தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.


இடப்பன்மை - ஊர்தோறும் தமிழாலயம் கட்டுக...

தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்

தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.

என, என்று

எ-டு:

பிறந்தானென

அழுக்காறென

நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து...

வெள்ளென வெளேறென...

பொள்ளென வாங்கே புறம் வேரார்.

பொம்மென சட்டென...

புலி பாய்ந்ததென பாய்ந்தான்.

என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க..

மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.


நிலலென்றா நீரென்றா தீயென்றா
நிலலென்னா நீரெனாத் தீயெனா
நிலனொடு நீரொடு தீயொடு


 இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.

காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்


 குறிப்பின் வரும் இடைச்சொற்கள்

அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.

துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.

பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.

இடையியல் முற்றிற்று..

கீழ்காணும் பாடலில் வரும் இடைச்சொற்களையும் அவை யொவ்வொன்றும் உணர்த்தும் பொருளையும் காண்க...

இன்றே முடிவுசெய்க எந்தமிழ் நாட்டிலினி
பன்றி யிடும்ஊளை பாடை மொழிப்பீடை
என்றும் ஒலிக்காது,  எங்கும் ஒலிக்காது
என்னவா னாலும் இதுமுடிவே என்றறைக.
தென்னா டுடைய சிவன்மீதே, வானுயர்ந்த
மன்னனாம் எங்கண்மால் செங்கண்ணன் மால்மீதே
குன்றுதொறும் நிற்கும் குமரமுரு கன்மீதே
நன்னருஞ் சூளென்றே நாட்டுவீர் எம்பாவாய்.
ஏ, இனி, உம், ஆம், தொறும் என்பன இப்பாட்டில் உள்ள இடைச்சொற்கள்....

ஏகாரம் மட்டும் ஆறு இடங்களில் வந்துள்ளது....

இடைச்சொற்கள் பாட்டிலும் பேச்சிலும் உரையிலும் பெரும் பயன் தருவன என்று காட்டுவதற்கே இது சொல்லப்பட்டதென்க....

உரிச்சொல்:

இது பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங்க வைக்கும் சொல்.

இது செய்யுளுக்கு மட்டுமே உரித்தான சொல்... பேச்சில் வாரா.

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.

எடுத்துக்காட்டு:
நனி பேதை
-
நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்தது.
நனி = மிகுதி, பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்
-
சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
சால = மிகவும்

மல்லல் ஞாலம்
-
மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்.

கடி மலர்
கடி நகர்

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர், காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்:

சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘மிகுதி’ என்னும் ஒருகுணத்தை (பொருளை) உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன.

🌺🌺🌺🌺

சால என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“சாலவும் நன்று” - மிகவும் நல்லது

🌸🌸🌸

 உறு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உறு பொருள் கொடுத்தும்” (மிகுதியான பொருளைக் கொடுத்தும்)

🌺🌺🌺

தவ என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“ஈயாது வீயும் உயிர் தவப் பலவே”

(பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர்).

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்:

நனி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்”

(கல்லாதவர்களும் மிக நல்லவர்களே, கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால்)
🌸
கூர் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“களி கூர் மனம்” (மகிழ்ச்சி மிகுந்த மனம்)

இன்றைய எழுத்து வழக்கிலும் ‘அன்பு கூர்ந்து’, ‘அருள் கூர்ந்து’ என வருவதைக் காணலாம்.
🌸
கழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கழி பேருவகை” (மிகப் பெரும் மகிழ்ச்சி)

செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘கழி நெடிலடி’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள்.

கடி என்னும் உரிச்சொல்:

கடி எனும் உரிச்சொலானது  காவல், கூர்மை, விரை (வாசனை), விளக்கம் (ஒளி வீசும் இயல்பு), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும்.

காவல்

கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து.

இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது.
🌸
கூர்மை

கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு.

இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
விரை (மணம்):

கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி

இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது.
🌸
விளக்கம்

விளக்கம் என்பது இங்கு ஒளி எனும் பொருள் தருவது.

‘கண்ணாடி அன்ன கடி மார்பன்’

ஒளி பொருந்திய மார்பு கொண்டவன். கடிமார்பன் என்பதில் கடி, விளக்கம் என்ற பொருளில் வருகிறது.
🌸
அச்சம்

‘கடி யாமம் காக்கும் கைவிளக்கு’

அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள். இங்குக் கடி, அச்சம் எனும் பொருளில் வருகிறது. (யாமம் = நள்ளிரவு)
🌸
சிறப்பு

‘கடி அரண்’

வலிமையான கோட்டை என்பது பொருள். இங்குக் கடி என்பது சிறப்பு (வலிமை) எனும் பொருளில் வருகிறது.
🌸
விரைவு

விரைவு = வேகம்.

‘எம் அம்பு கடி விடுதும்’

இத்தொடரின் பொருள், எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம். இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
மிகுதி

‘கடுங்கால் ஒற்றலின்’

மிகுதியான (கடுமையான) காற்று வீசுவதால் என்பது பொருள். இங்குக் கடி (கடும்) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது.
🌸
புதுமை

‘கடி மணச் சாலை’

புதுமை மணம் நிறைந்த இடம். இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது.
🌸
ஆர்த்தல்

ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள்.

‘கடி முரசு’ = ஒலிக்கும் முரசு.

இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது.
🌸
வரைவு

வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள்.

‘கடிமது நுகர்வு’

கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல். இத்தொடரில் கடி, விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
மன்றல்

மன்றல் என்றால் திருமணம் என்று பொருள்.

‘கடிவினை முடுகு இனி’

திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள். இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது.
🌸
கரிப்பு

கரிப்பு, காரச் சுவையைக் குறிக்கும். கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு.

‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’

கடிமிளகு = காரமான மிளகு. காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள். இங்குக் கடி, கார்ப்பு எனும் பொருளில் வந்தது.

இவ்வாறு, கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் கண்டோம்...😊
மேலும் படிக்க »

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???
முதன்முதலில் சொன்னது தமிழ்தான்.
தமிழிலக்கணந்தான் (தமிழ் இலக்கணம் தான்)
எப்படி ?
பந்து என்று  - என்பது எப்படிப் புணரும் ?..
பந்தென்று என்றல்லவா புணரும்..
பந்து என்பது மென்றொடர்க் குற்றியலுகரம்.
சந்து ஒன்று = சந்தொன்று
போந்து ஒன்று = பொந்தொன்று
ஆக பந்து சந்து சிந்து விந்து என்று அனைத்தும் மென்றொடர்க் குற்றியலுகரங்களே.
ஆனால் இந்து என்பது முற்றியலுகரமாகவே ஒலிக்கிறது.
இந்து ஒருவர் = இந்துவொருவர்
இந்து அங்கு = இந்துவங்கு
என்று உயிர் போலவே புணரும்.
ஏனெனில் இந்து என்பது தமிழன்று என்பதால்..
இதனால் தமிழர் இந்துக்கள் அல்ல என்று தமிழே காட்டுகின்றதென்க....
நமக்குத்தான் விளங்கவில்லை.
நம் இலக்கணம் தமிழ்  மொழியை மட்டும் காக்க என்று எண்ணிக் கொண்டுள்ளோம்... அது நம் இனத்தைக் காக்கவல்லது.
இனியாவது இதற்காவது... குற்றியலுகரத்தைத் தமிழர் போற்றவோராக...
-கவினப்பன்
மேலும் படிக்க »

குறள் பொருள் கண்டறிக : அகவிழியன்


#௧

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1096)

சொற்பொருள் :
உறாஅதவர்போல்-அயலார் போல;
சொலினும்-சொன்னாலும்.
செறாஅர்- காதலி / காதலன்
சொல்-மொழி;
ஒல்லை-விரைவில் ;
உணரப்படும்-அறியப்படும்.

குறிப்பு :
செறாஅர்=வெகுளாதவர்;
வெகுள்= வெறுப்பு =To hate/dislike;
வெகுளாமை= வெறுப்பின்மை= absence of hate;
வெகுளாதவர்= The person with absence of hate (Lover);

அஃது,
வெகுளாதவர்= காதலி / காதலன்

காதலர் பழகிப் புரிதல் ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படும் உணர்வு பற்றிய குறள்.

பொருள் : கண்டறிக
*********************************************************
குறல் பொருள் கண்டறிக :

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:44)

சொற்பொருள் :

பழி-தீவினை;
 அஞ்சி-நடுங்கி;
பாத்து-பிரித்துக் கொடுத்து; ஊண்-உண்ணுதல்; உடைத்தாயின்-உடையதானால்,

வாழ்க்கை-வாழ்தல்;
வழி-வழி;
எஞ்சல்-குறைவு; எஞ்ஞான்றும்-எப்போதும்; இல்-இல்லை.

குறிப்பு :

வழிஎஞ்சல் = Extinction of Lineage

என்றும் பொருள்படும்.

விளக்கம் : குழுவினர் கண்டறிந்து இங்கு பதியவும்.
மேலும் படிக்க »

திருக்குறளில் இருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள முடியும்.


1. வாழ்க்கை நெறிகள்
2. சிந்திக்கும் முறை பற்றிய பயிற்சி
3. தொகுத்து வகுத்துப் பகுத்துப் பார்க்கும் அறிவு
4. சொல்வளம் பெறுதல் பயிற்சி (ஞான்று/வைகல்/நாள்...)
5. புணர்ச்சி நெறிகள் அனைத்திற்கும் குறளில் காட்டுகள் உள்ளன.
6. அளபெடை குற்றுகர குற்றிகர எழுத்துகளை அறிதல்
7. பொருள்கோள் முறை
8. அணிபடச்சொல்லும் முறை (பொருளணியும் சொல்லணியும் - பொருளணிக்கு எத்தனையோ காட்டுகள் உண்டு... உடுக்கை இழந்தவன் கை என்பது ஒன்றே உவமை அமைக்கும் முறையைக் கற்றுத்தரும்; மற்றை அணிகளெல்லாம் குறளில் உள்ளன - சொல்லணிக்கு ஏராளமான பாடல்கள் உள்ளன...)
9. உவக்காண் எங்காதலர் சென்றார் இவக்காண் என்மேனி பசப்பூர் வது என்பதில் உள்ள குறிப்பு அறியும் பயிற்சி, நுண்பொருள் உணரும் அழகியற் பயிற்சி.
10. யாப்புப் பயிற்சி, செப்பலோசையை முழுதும் கற்கலாம்
11. தொடை நயம் (பேதமை யென்ப தியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் என்பதே சான்று)
12. மறைந்த தமிழ் மொழி வழக்குகளைக் கற்றுக்கொள்வது (உவக்காண்)

இன்னும விரிக்க விரிக்க மிகுந்து கொண்டே போகும்...

அதனால் திருக்குறள் கற்பதினால் பல பயன் உள்ளன.. உங்கள் வீட்டில் குறள் உள்ளதா?

நன்றி...

அரங்கன்

மேலும் படிக்க »

தமிழில் வேர் சொற்கள் எப்படி உருவாயின ?

சுட்டடி வேர் பெரும்...மூலமாக...அமைந்துள்ளது. ஒப்பொலிச் சொல்லாக்கம் வழியும் சொல் உருவாகும். ஊராகச் சுட்டின் வாயிலாக பெரும் பகுதி சொற்கள் உருவாகியுள்ளன.

எ.கா.
அ, இ, உ சுட்டொலி.

க், ச், த், ப், ஞ், ந், ம், முதலிய மொழிமுதல் மெய்கள் ஊகாரச் சுட்டுடன் சேர்கையில் வித்து உருவாகும்.

உ> உல்> க்+உல்= குல்
குல்= கூடல், வளைதல், குத்தல் கருத்து வேர்.

குல்>குலம்.
குலம்= கூடி வாழும் மக்கட் கூட்டம்.

அல், இல், உல் இவையே மூல வேர்கள். இவற்றைப் பிளந்தால் ஊகாரமே மரபணு வேராக நிற்கும்.

ஆ, ஈ, ஊ அண்மை, முன்மை, சேய்மை சுட்டு வேர்கள். இவை மூல உணர்ச்சியொலிகளாகும்.

ஆ > சேய்மை
ஈ> அண்மை
ஊ> முன்மை

ஆ = சீற்றம்
ஈ= இழிவு, மகிழ்வு

ஊ= துன்பம்

பன்னிரண்டு உயிர்கள் உருவாக்கம்.

ஆ~ ஈ~ஊ} மூல உயிர்கள் 3.

ஆ>அ
ஈ>இ
ஊ>உ
 குறிலாய்த் திரிய 6 ஆகின.

ஈ> ஏ எனத் திரியும்.
ஊ> ஓ நெடிலெனத் திரியும்.

ஏ> எ எனவும்
ஓ > ஒ எனவும்
 குறிலாகி மொத்தம் பத்து உயிர்கள் உருவாகின.

பின்னர்,
அ+இ= ஐ

அ+உ= ஔ எனப் புணரொலிகள் தோன்றி பன்னிரண்டு உயிர்களும் உருவாகின.

// /
அரங்கன் ஐயா  : குழந்தைகள் முதலில் நெடில் உயிர்களையே சொல்லமுடிவது போல அல்லவா ஐயா...

திரு வளவன் ஐயா  : ஆம்...ஆம்..தமிழ்...இயற்கை மொழி.

அரங்கன் ஐயா :என் இரு மகள்களுக்கும் ககரம் பலுக்க வர மூன்றாண்டுகளாயிற்று... இன்னமும் கூடச் சிறியவளுக்கு வரவில்லை (நாலாண்டு முடியப்போகிறது) இவ்வாறே தமிழின் தோற்றத்திலும் முதலில் எளிய எழுத்துகளும் பிறகே அனைத்தும் உருவாயின என்பதேதாமே ஐயா..

திரு வளவன் ஐயா : மிகச் சரி. கூர்தலறம்...அவ்வாறே.///

மம் மம்> மம்மம் குழவி வளர்ப்பொலி

மா> மா ஆஅ> அம்மா
தாயின் மார்பில் பால் குடிப்பன எழுப்பிய மூல ஒலி.
இது மென்மை.
வன்மையாயின்...அப்பா என்றாகும்.

ங்கா என்பதும் குழவி வளர்ப்பொலி தானே ஐயா... அருமை....

இங்ஙா....குழவி வளர்ப்பொலியே. குழந்தை அழும் பொழுது எழும் ஒலி. பசிப்பதால் அழுவதாகக் தாய் கருதுவாள். எனவே குழந்தையின் பாலுக்கு இங்ஙா எனும் குழவி வளர்ப்பொலிச் சொல் உருவாகிற்று.

இதனால்தான் தமிழல்லாத மொழிவழி மொழிவரலாறு காண முயல்வது காட்டுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு செல்வது என்பார் பாவாணர் .

Culture என்ற சொல்லுக்கு ஆங்கில அறிஞர்கள் மூலத்தைக் காணவேண்டும் என்றால் தமிழைப் படிக்காது முடியாது...

அதனாற்றான்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ் என்றனர்... வேறு மொழிகளுக்கு இது போன்று பாடவும் முடியாது.. கூறவும் முடியாது...

ஐயப்பாடு : புதிய வேர் சொற்களை நாம் உருவாக்க கூடாதா?

புதிய வேர்கள் உருவாகா. மொழிஞாயிறு ஞா.தேவ நேயப் பாவாணரின் முதற்றாய் மொழி...காண்க.
மேலும் படிக்க »

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் அறிவுறுத்தல்



அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அன்னாரின் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைச் செய்து முடிப்பதே....

. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை

(1) சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு, மொழியியற் கலைநாகரிகத் தன்னாட்சி (Linguistic and Cultural Autonomy) அமைத்தல்.

(2) தனித்தமிழ்ப் பற்றும் தமிழிலக்கிய வறிவும் உள்ள ஆசிரியரையே கல்வியமைச்சராக அமர்த்துதல்.

(3) தனித்தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உள்ளவராய் ஓய்வு பெற்றுள்ள, கல்வித்துறை யியக்குநர், பெருங்கல்லூரி முதல்வர், தலைமைப் பேராசிரியர் ஆகியோரையே, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துணைக் கண்காணகராக (Vice-Chancellors) அமர்த்துதல்.

(4) இருவகை வழக்குத் தமிழ்ச்சொற்களையும் அறிந்தவரும் வண்ணனை மொழியியலையன்றி வரன்முறை மொழி நூலையே கடைப்பிடிப்பவரும், வடமொழியிந்தித் தாக்குதலினின்று தமிழைக் காப்பவரும், உண்மையையுரைக்கும் திண்மையுள்ள வருமான தமிழ்ப் பேராசிரியரையே, சென்னை அண்ணாமலை மதுரையாகிய முப்பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறைத் தலைவராக அமர்த்துதல்.

(5) தமிழுக்கு மாறாக வேலைசெய்யும் தமிழாசிரியர், தலைமை யாசிரியர், முதல்வர், துணைக் கண்காணகர் ஆகியோரைப் பதவியினின்று நீக்குதல்.

(6) இந்தியால் தமிழ் கெடுவது திண்ணமாதலால், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டத்தையே கல்வி, ஆள்வினை (Administration), வழக்குத்தீர்ப்பு ஆகிய முத்துறையி லும் எல்லா மட்டத்திலும் கையாளுதல்.

(7) தமிழ்ப்பற்றற்ற பிராமணத் தமிழ்ப்பண்டிதர் கொண்டான்மாரைத் துணைக்கொண்டு தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி என்னும் கலவைமொழி அகரமுதலியை உடனே திருத்துதல்.

(8) தமிழ்நாட்டு உண்மை வரலாற்றை எழுதுவித்துப் பாடமாக்கலும், தமிழ்ப்பகைவரால் எழுதப்பட்ட பொய் வரலாற்றைப் புறக்கணித்தலும்.

(9) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை முழுநிறை வாக உருவாக்குதல்.

(10) செம்மையான ஆங்கிலத் தமிழகரமுதலி யொன்று தொகுப்பித்தலும், கலையறிவியல் கம்மியக் குறியீடு களைத் தூய தமிழில் மொழிபெயர்த்தலும்.

(11) பேராயக்கட்சியாளர் தொகுத்த கலைக்களஞ்சிய நடையை யும், அதிலுள்ள தமிழைப்பற்றிய தவறான கருத்துகளையும் திருத்துதல்.

(12) அச்சிற்கு வராத தமிழ்ச்சொற்களையும் தமிழ் ஏட்டுப் பொத்தகங்களையும் தக்க அறிஞரைக்கொண்டு தொகுப்பித்தல்.

(13) கல்வெட்டுத் தொகுப்பும் வெளியீடும் தக்க தமிழறிஞரைக் கொண்டு செய்வித்தல்.

(14) பாடப்பொத்தகங்களைத் தூய தமிழில் எழுதுவித்தலும், தூய தமிழ் நூல்களை வெளியிடும் கழகங்களை ஊக்கு தலும்.

(15) தூய தமிழிற் பேசும் மாணவர்க்கும் தூய தமிழிற் சிறந்த நூலியற்றும் அறிஞர்க்கும் பரிசளித்தல்.

(16) ஆட்பெயர், இடப்பெயர், பொருட்பெயர், பட்டப்பெயர், சிறப்புப்பெயர் ஆகிய எல்லாப் பெயரையும் தூய தமிழாக்கல்.

(17) இலக்கணம், இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பழந்தமிழ் அறிவியல்களையும் கலைகளையும் முன்போல் தூய்மைப்படுத்துதல்.

(18) அரசினர் அறிவிப்புகளும் விளம்பரங்களும் எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையுமின்றி வெளிவரச் செய்தல்.

(19) தமிழையும் பதினெண் திரவிட மொழிகளையும் ஒருங்கே கற்பிக்கும் ஒரு கல்லூரி நிறுவுதல்.

(20) தமிழ்ப்பற்றுள்ளவரையே, சட்டசவை பாராளுமன்ற வேட்பாளராகத் தெரிந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கவும் செய்தல்.

(21) வண்ணனை அடிப்படையிலன்றி வரலாற்றடிப் படையி லேயே மொழி நூலை வளர்த்தல்.

(22) கோயில்வழிபாடும், இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெறச் செய்தல்.

(23) தமிழுக்காக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வாழ்க்கை நடைப்பொருள் அளித்தல்.

(24) தமிழ்ப்பற்றாற் பதவியிழந்தோரைப் பின்னோக்கிய வலிமை யொடு (Retrospective effect) மீண்டும் பதவியில் இருத்துதல்.

(25) வருவாயற்ற பெருந்தமிழ்ப் புலவர்க்கு உதவிச் சம்பளம் அளித்தல்.

(26) தமிழுணர்ச்சியைப் பரப்பிப் பொதுமக்கட்குத் தமிழறிவு புகட்டும் தனித்தமிழ் இதழ்கட்குப் பொருளுதவி செய்தல்.

(27) மேனாட்டாரைத் துணைக்கொண்டு, தென்மாவாரியில் ஆழ மூழ்கிப் பழம்பொரு ளெடுத்தாராய ஏற்பாடு செய்தல்.

(28) அலுக்கிற்கும் அளபெடைக்கும் போதிய இடைவெளி விட்டு, இம்மியும் பிசகாது தியாகராசையத் கீர்த்தனைகள் போன்றே இன்பமாய்ப் பாடக்கூடிய உயரிய மெட்டுப் பாடல்களை அறிவும் ஒழுக்கமும் தழுவிய பொதுப் பொருள்கள்பற்றி, இயற்றித்தரும் இசைவாணர்க்கும் பாவலர்க்கும் சிறந்த பரிசளித்தல்.

(29) ஊர்காவலர் படைத்துறையினர் உடற்பயிற்சியும் மெய்க் காட்டும் (parade), தமிழ் ஏவற் சொற்களைக் கொண்டு நடப்பித்தல்.

(30) கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இறுதியில் உலக வாழ்த்துப் பாட்டுத் தமிழிற் பாடல்.

(31) மறைமலையடிகள், (P.T.) சீநிவாசையங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவர்க்கும் சென்னையில் படிமை நிறுவுதலும், அம் மூவர் முழுவுருவப் படங்களையும் முதன்மையான அரசியல் அலுவலகங்களிலும் பொதுக் கூடங்களிலும் மாட்டி வைத்தலும்.

(32) செய்யுட்கே சிறப்பாக வுரிய இலக்கணக் கூறுகளை நீக்கி விட்டு, உரைநடை யிலக்கணத்தைமட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிப் பொதுத்தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைத்தல்.

(33) இகரத்தின் நெடிலைக் குறித்தற்கு, இடைக்காலத்தில் ஆரியராற் புகுத்தப்பட்ட. வாயிற்கால்போன்ற கிரந்த வரிவடிவை நீக்கிவிட்டு, இறுதியிற் சுழிகொண்ட பழைய இகர வடிவையே கையாளுதல்.

(34) இங்கிலாந்தில் 1875ஆம் ஆண்டிற் செய்தவாறு, தமிழ் நாட்டில் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைச் சட்ட வாயிலாய்ப் புகுத்துதல்.

(35) அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறைத் தொடக்கவிழாத் தலைவர் பர். சட்டர்சியின் அச்சிட்ட (தமிழுக்கு மாறான) தலைமையுரையை, அக் கழகத்தி னின்று அகற்றுதல்.

(36) பர் சட்டர்சியும் பர்.கத்திரேயும் இந்திய ஞாலநூலியல் வரலாறு-முதன்மடலத்தில் (Gazetteer of India - Vol. I) தமிழைப் பற்றி வரைந்துள்ள தவறான கருத்துகளைத் திருத்துதல்.

தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை

(1) உண்மையான தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் வெளி யிட்டு உலக முழுதும் பரப்புதல்.

(2) வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச்சொற்கள், நூல்கள், கலைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றை ஆராயுமாறு, தக்க ஆராய்ச்சி யாளரைக் கானா, எகிபது, பிரனீசு, மலைநாடு, மெகசிக்கோ (Mexico), காம்போதியா, சையாம், மலேயா, சாலித்தீவு முதலிய நாடுகட்கு அனுப்புதல்.

(3) வெளிநாடுகளுடன் போன்றே, இந்திய நடுவணரசோடும் பிற இந்திய மாநிலங்களோடும், எழுத்துப் போக்குவரத்து ஆங்கிலத்திலேயே நடத்துதல்.

(4) ஒவ்வொரு பெருநாட்டிலும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் பதவி ஏற்படச்செய்தல்.

(5) தமிழ்மொழி நாகரிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு விடைமுகவர் குழுவை (Delegation), உலகஞ் சுற்றிவரச் செய்தல்.

(6) தமிழர் பெருந்தொகையினராயுள்ள இலங்கைபோன்ற வெளிநாடுகளில், இந்தியத் தூதாண்மைக் குழுவில், தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுள்ள தூய தமிழர் ஒருவரும் இருக்கச் செய்தல்.

(7) ஆக்கசுப்போர்டு (Oxford) ஆங்கில அகரமுதலியிலும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திலும(Encyclopaedia Britanic) தமிழைப் பற்றிய தவறான குறிப்புகளையும் கூற்றுகளையும் உடனே திருத்தச்செய்தல்.

இவற்றோடு செய்ய வேண்டியன பல இருந்தாலும், மொழியளவில்,....

திராவிட மொழிக்குடும்பம் என்ற சொலவடையை மாற்றித் 'தமிழிய மொழிக் குடும்பம்' என்று உலகறிய நிருவி மாற்றிடச் செய்யவேண்டும் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம்....
மேலும் படிக்க »

எழுத்திலக்கணம் : புணர்ச்சி விதிகள்

1/11/2015

புணர்ச்சி யிலக்கணம் : புணர்ச்சி இலக்கணத்தின் முன்னுரை கோப்புக்கு இதை சொடுக்கவும் .





புணர்ச்சி என்பது இரண்டு ஒலிகள் சேரும் விதம் என்க.

திரு ஐயாறு என்ற இரு சொற்களுள் திரு என்பது நிற்க ஐயாறு என்பது வந்து சேருகின்றது... எனவே திரு என்பது நிலைமொழி என்றும் ஐயாறு என்பது வருமொழி என்றும் சொல்லப்படுகின்றது.

திரு ஐயாறு என்ற இரண்டு சொற்கள் இணைவதானது உண்மையில் திரு என்ற நிலைமொழியின் கடைசி எழுத்தும் ஐயாறு என்ற வருமொழியின் முதல் எழுத்தும் சேருவதே.

அதாவது, ரு என்ற உயிர்மெய்யும் ஐ என்ற உயிரும் சேருகின்றது...

ரு என்பதோ ர் +உ என்பதே ஆதலால், உண்மையில் உ என்ற உயிரும் ஐ என்ற உயிரும் சேருகின்றது....

இவ்வாறு இரு ஒலிகள் சேருவதே புணர்ச்சி என்க...
இப்புணர்ச்சி என்பது இருவகைப்படும்.

வேற்றுமை உருபுகள் தோன்றியும் தொக்கியும் வந்து புணர்வது முதல் வகை. இதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

வேற்றுமை அல்லாத வழிப் புணர்வது இரண்டாவது வகை. இதை அல்வழிப் புணர்ச்சி என்பர்.
அப்பரின் பாட்டு
அப்பர் பாட்டு - இவை வேற்றுமைப் புணர்ச்சி.

நல்ல பாட்டு - இஃது அல்வழிப் புணர்ச்சி
அப்பரின் பாட்டு என்பதில் அப்பர் என்ற நிலைமொழியில் இன் எனும் வேற்றுமை உருபு தோன்றி, பாட்டு என்ற வருமொழியோடு புணர்கின்றது...

அப்பர் பாட்டு என்பதில் அப்பர் என்ற நிலைமொழியில் இன் என்ற வேற்றுமை உருபு தொக்கி நின்று, பாட்டு என்ற வருமொழியோடு புணர்கின்றது...

இவ்வாறு வேற்றுமை உருபுகள் தோன்றியும் தொக்கி நின்றும் புணர்வது வேற்றுமைப் புணர்ச்சி என்க.

நல்ல பாட்டு என்பதில் வேற்றுமை உருபுகளுக்கு வேலை இல்லை.

நல்ல என்ற குறிப்புப் பெயரெச்சம், பாட்டு என்ற வருமொழியோடு புணர்கின்றது. எனவே இஃது அல்வழிப் புணர்ச்சி என்க.

ஆக, புணர்ச்சி என்பது வேற்றுமையும் அல்வழியும் ஆன இரண்டு வழிகளில், நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் புணர்வதாகும் என்க.

இனி,

தமிழ் கற்போம்
தமிழ்த்தொண்டு

இந்த இரண்டு சொற்றொடர்களைப் பாருங்கள்.

இரண்டிலும் நிலைமொழி 'தமிழ்' எனும் சொல்தான். வருமொழிகள் மட்டும் மாறுகின்றன.

முதல் புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் எந்த மாற்றமும் இல்லாது இயல்பாகப் புணர்ந்துள்ளன, இதனை இயல்புப்புணர்ச்சி என்பர்.

இரண்டாம் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்றில் த் எனும் தகர வல்லினமெய் தோன்றியுள்ளது. இது வருமொழி முதலெழுத்தான தொ எனும் உயிர்மெய்யில் முதலில் நிற்கும் தகரமெய்யே. இத்தகர வல்லின மெய் மிகுந்துள்ளதையே 'வலி மிகுதல்' என்பர். இவ்வகையில் நிலைமொழியோ வருமொழியோ மாற்றமடைந்து புணர்வதை, மாற்றப் புணர்ச்சி (விகாரப் புணர்ச்சி) என்பர்.

ஆக, புணர்ச்சி என்பது வேற்றுமையும் அல்வழியும் ஆன இரண்டு வழிகளில், நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும், இயல்பாயும் மாற்றமடைந்தும் புணர்வதாகும் என்க.

" புணர்ச்சி பற்றிய நம் கற்றல் தொடரும்"

புணர்ச்சி விதி 1:

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிறீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

எ-டு.
கிளி + அழகு - கிளியழகு
தீ + எரிந்தது - தீயெரிந்தது
பனை + ஓலை - பனையோலை
---
அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிறீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

எ-டு.
பல + அணி - பலவணி
பலா + இலை - பலாவிலை
திரு + அடி - திருவடி
பூ + அரும்பு - பூவரும்பு
நொ + அழகா - நொவ்வழகா
கோ + அழகு - கோவழகு
கௌ + அழகு - கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.

கோ + இல் - கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
---
ஏகாரவுயிறீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

அவனே + அழகன் - அவனேயழகன்
சே + உழுதது - சேவுழுதது

புணர்ச்சி விதி 2:

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்:

ஆடு + அரிது - ஆடரிது

குற்றியலுகரம், யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.

நாகு + யாது - நாகியாது

இது + என = இதுவென (விதி 1)

இங்கு + என = இங்கென (விதி 2)...

வேறுபாட்டையுணர்க...
குற்றியலுகரஞ் சமற்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.

சம்பு + அருளினான் - சம்புவருளினான்
இந்து + உதித்தது - இந்துவுதித்தது

பிறமொழிச் சொற்கள் நம் இலக்கணத்திற்கு ஒவ்வாதவை... அவை சேரச்சேர நம் இலக்கணத் தூய்மை கெட வாய்ப்புண்டு...

மற்ற மொழிகளில் பிறமொழிச் சொற்கள் சேரச்சேர வளம் பெருகும். தமிழிலோ வளங்குன்றும் என்ற உண்மை இதனால் விளங்கும்....
புணர்ச்சி விதி 2 (தொடர்ச்சி)

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்:

சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.

கதவு + அழகு - கதவழகு
கதவு + யாது - கதவியாது

புணர்ச்சி விதி 3:

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்.

மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி = செய்ந்நன்றி
கை + மாறு = கைம்மாறு

புணர்ச்சி விதி 4:

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் வரும் வருமொழி புணர்தல்

அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.


அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யானை இவ்யானை உவ்யானை எவ்யானை
அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்
---
அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.

அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

புணர்ச்சி விதி 5:

ஆ, ஏ, ஒ ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்:

ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யாகார வினா முன்னும் வரும் வல்லினம் மிகாவாம்.

அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய

புணர்ச்சி விதி 6:


வினைமுற்று வினைத்தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்:

வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம்.

அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.

எ-டு:

தெரிநிலை வினைமுற்று:

உண்டன குதிரைகள்
உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா
வந்தனை சாத்தா
வந்தது புலி
வந்தாய் பாணா
உண்டீர் தேவரே
உண்டாள் சாத்தி
வந்தான் சாத்தன்

குறிப்பு வினைமுற்று:

கரியன குதிரைகள்
வில்லி சாத்தா
ஊக்கமது கைவிடேல்
கரியை தேவா
கரியாய் சாத்தா
கரியீர் சாத்தரே
...............

வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வினைமுற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னும் வரும் வல்லினம் மட்டும் மிகுமெனக் கொள்க.

கூவிற்றுக் குயில், குத்தாட்டுக் களிறு எனவாறு...


ஏவலொருமை வினைமுற்று:

நட கொற்றா
வா சாத்தா
எறி தேவா
கொடு பூதா
ஓடு கொற்றா
வெஃகு சாத்தா
பரசு தேவா
நடத்து புதியா
அஞ்சு கொற்றா
எய்து சாத்தா
வனை தேவா
செய்கொற்றா
சேர் சாத்தா
வாழ் பூதா
நில் கொற்றா
கேள் சாத்தா
உண் கொற்றா
தின் சாத்தா

வினைத்தொகை:

விரிகதிர்
ஈபொருள்
அடுகளிறு
வனைகலம்
ஆடு பாம்பு
அஃகுபிணி
பெருகுபுனல்
ஈட்டுதனம்
விஞ்சுபுகழ்
மல்கு சுடர்
உண்கலம்
தின்பண்டம்
கொல்களிறு
கொள்கலம்
செய்கடன்
வீழ்புனல்
..................

புணர்ச்சி விதி 7:

 பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்:

அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா.

உண்ட கொற்றன்
கரிய காற்றன்
உண்ணாத குதிரை
இல்லாத குதிரை

அதே வேளை, ஈற்றுயிர் மெய் கெட்டு ஆகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.

உண்ணாக் குதிரை
இல்லாக் குதிரை

புணர்ச்சி விதி 8:

இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.


தேடிக்கொண்டான்
போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான்
 உண்ணப் போனான்
மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்
உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்
அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செய்வான்

புணர்ச்சி விதி 9:

 வன்றொடர்க்குற்றியலுகர வீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்

பொருது சென்றான்
நடந்து போனான்
எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்

துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.

உண்ணாப் போனான்

புணர்ச்சி விதி 10:

அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறு உயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

விளக்குறிது
விளக்கோடு
தாராச்சிறிது
தாராச்சிறை
தீச்சுடும்
தீச்சட்டி
கொண்மூக்கரிது கொண்மூக்கருமை (கொண்மூ என்றால் முகில்)
சேப்பெரிது
சேப்பெருமை
கோச்சிறிது
கோச்செவி

 இருவழி என்றது வேற்றுமை வழியும் அது அல்லாத அல்வழியும் என்க.

புணர்ச்சி விதி 11:

அகரவீற்று அஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும், வகர வைகார வீற்று அஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா.

பல போயின
பல படைத்தான்
சில சென்றன
சில சொற்றான்
உள்ளன குறைந்தன
உள்ளன கொடுத்தான்
உள்ளவை தகர்ந்தன
உள்ளவை தந்தான்

...........

பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் திரியாதும், வரும்.

பலபல பலப்பல பற்பல பல்பல
சிலசில சிலசில சிற்சில சில்சில
........

பல, சில என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும்.

பல்கலை பல்கலை சிலகலை சில்கலை
பலமலை பன்மலை சிலமலை சின்மலை
பலயானை பல்யானை சிலயானை சில்யானை
பலவணி பல்லணி
சிலவணி சில்லணி

புணர்ச்சி விதி 12:

பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும்.


பூங்கொடி பூங்கரும்பு...

 ககரத்து இனமான ஙகரம் மிகுந்து வந்துள்ளது... இனவெழுத்துக்கள் என்று நாம் முன்பு கண்டதை யோர்க...

ஓர்க - எண்ணிக்கொள்க

பூ + கொடி = பூங்கொடி
பூ + செடி = பூச்செடி , பூஞ்செடி
பூ + தளிர் = பூந்தளிர்
பூ + பிஞ்சு = பூப்பிஞ்சு , பூம்பிஞ்சு....

புணர்ச்சி விதி 13:

முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும்,
எது என்னும் வினாப் பெயர் முன்னும்,
ஒரு, இரு, அறு, எழு என்னும் திரிந்த எண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகாவாம்.

அது குறிது அது கண்டான்
இது சிறிது இது சொன்னான்
உது தீது உது தந்தான்
எது பெரிது எது பெற்றான்

ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல்

புணர்ச்சி விதி 14:

இ ஐ ய ர ழ வீற்று அஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்:

இகர ஐகாரவுயிர்களையும் யகர ரகர ழகர வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும் மிகும்

எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.

வேற்றுமை:

கரிக்கோடு
நாய்க்கால்
யானைச்செவி
தேர்த்தலை
பூழ்ச்செவி

பண்புத்தொகை:

மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி
சாரைப்பாம்பு
கார்ப்பருவம்
பூழ்ப்பறவை

உவமைத்தொகை:

காவிக்கண்
வேய்த்தோள்
குவளைக்கண்
கார்க்குழ்
காழ்ப்படிவம்

எழுவாய்:

பருத்திகுறிது
நாய்தீது யானைகரிது
வேர்சிறிது யாழ்பெரிது

உம்மைத்தொகை

பரணிகார்த்திகை
பேய்பூதம்
நீர்கனல்
 இகழ்புகழ்

இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா.

இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான்
குவளை கொய்தான் வரைபாய்ந்தான்
வேய் பிளந்தான் வாய்புகுந்தது
தேர் செய்தான் ஊர் சென்றான்
தமிழ் கற்றான் அகழ் குதித்தான்


காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க.

புளி தின்றான், அடவி புக்கான் என்பன, புளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை.

காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.


புணர்ச்சி விதி 15:

மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்:

 சில உயிரீற்று மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.

மா + காய் - மாங்காய்
விள + காய் - விளாங்காய்

இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம் எனும் சாரியை தோன்றும்.

புளி + காய் - புளியங்காய்
புன்கு + காய் - புன்கங்காய்
ஆல் + காய் - ஆலங்காய்
---

ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்று ஐகாரங் கெட்டு அம் எனும் சாரியை தோன்றும்.

எலுமிச்சை + காய் - எலுமிச்சங்காய்
மாதுளை + காய் - மாதுளங்காய்


புணர்ச்சி விதி 16:

குற்றியலுகரவீறு

வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும் .

அல்வழி:
கொக்குக்கடிது
சுக்குத்திப்பிலி

வேற்றுமை:
கொக்குச்சிறை
சுக்குக்கொடு

மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.

அல்வழி:
குரங்கு கடிது
அம்பு தீது

வேற்றுமை:
 குரங்குக்கால்
அம்புத்தலை

குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.
---

ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.

அன்று கண்டான்
பண்டு பெற்றான்
இன்று தந்தான்
முந்து கொண்டான்
என்று சென்றான்

ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு, உங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, யாண்டு என்னும் இடைச்சொற்களின முன் வரும் வல்லினம் மிகும்.

அங்குக்கண்டான்
ஆங்குக்கண்டான்
இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான்
உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான்
---

நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.

அல்வழி வேற்றுமை
நாகு கடிது நாகு கால்
எஃகு கொடிது எஃகு கூர்மை
வரகு சிறிது வரகு சோறு
தௌ;கு பெரிது தௌ;கு பெருமை
---

டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.

ஆட்டுக்கால்
ஆட்டுமயிர்
ஆட்டுவால்
ஆட்டதர் ஆற்றுக்கால்
ஆற்றுமணல்
ஆற்றுவழி
ஆற்றூறல் நெடிற்றொடர்
பகட்டுக்கால்
பகட்டுமார்பு
பகட்டு வால்
பகட்டடி வயிற்றுக்கொடல்
வயிற்றுமயிர்
வயிற்றுவலி
வயிற்றணி உயிர்த்தொடர்
காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.
ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.

மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.

பண்புத்தொகை
மருந்து + பை - மருந்துப்பை
கரும்பு + நாண் - கருப்புநாண்
கரும்பு + வில் - கருப்புவில் வேற்றுமை
கன்று + ஆ - கற்றா
அன்பு + தளை - அற்புத்தளை
என்பு + உடம்பு - எறபுடம்பு

உவமைத்தொகை
குரங்கு + மனம் - குரக்குமனம்
இரும்பு + நெஞ்சம் - இருப்புநெஞ்சம்

---

சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.

பண்டு + காலம் - பண்டைக்காலம்
இன்று + நாள் - இற்றைநாள்

அல்வழி
அன்று + கூலி - அன்றைக்கூலி வேற்றுமை
இன்று + நலம் - இற்றை நலம்
சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

நேற்று + பொழுது - நேற்றைப்பொழுது. எ-ம்.
நேற்று + கூலி - நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

புணர்ச்சி விதி 17:

குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்:

வடக்கு, குணக்கு, குடக்கு, என்னுஞ் சொற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும்.

வடக்கு + கிழக்கு - வடகிழக்கு
மேற்கு - வடமேற்கு
திசை - வடதிசை
மலை - வடமலை
வேங்கடம் - வடவேங்கடம்

குணக்கு + திசை - குணதிசை
கடல் - குணகடல்

குடக்கு + திசை - குடதிசை
நாடு - குடநாடு

கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்ஙனம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து மிகுந்தும் புணரும்.

கிழக்கு + பால் - கீழ்பால்
திசை - கீழ்த்திசை
கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு.

தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.

தெற்கு + கிழக்கு - தென்கிழக்கு
மேற்கு - தென்மேற்கு
மலை - தென்மலை

மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது.

மேற்கு + கடல் - மேல்கடல்
வீதி - மேல்வீதி
திசை - மேற்றிசை
மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு.

இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்குவாயில், தெற்கு மலை, கிழக்குத் திசை, மேற்கு மலை, என இங்ஙனங் காட்டிய திரிபன்றியும் வரும்.

வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

வடதிசை என்பது, வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை.

புணர்ச்சி விதி 18:

உகரவீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி:

ஒன்று:
ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.

ஒன்று + கோடி - ஒருகோடி
கழஞ்சு - ஒருகழஞ்சு
நாழி - ஒருநாழி
வாழை - ஒருவாழை
ஆயிரம் - ஓராயிரம்

இரண்டு:
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.

இரண்டு + கோடி - இருகோடி
கழஞ்சு - இருகழஞ்சு
யானை - இருயானை
வாழை - இருவாழை
ஆயிரம் - ஈராயிரம்

மூன்று:
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும்.

மூன்று + ஆயிரம் - மூவாயிரம்
கழஞ்சு - முக்கழஞ்சு
நாழி - முந்நாழி

நான்கு:
நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம்.

நான்கு + ஆயிரம் - நாலாயிரம்
யானை - நால்யானை
கழஞ்சு - நாற்கழஞ்சு
மணி - நான்மணி

ஐந்து:
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழுத்தாகத் திரியும்.

ஐந்து + ஆயிரம் - ஐயாயிரம்
கழஞ்சு - ஐங்கழஞ்சு
மூன்று - ஐம்மூன்று
வட்டி - ஐவ்வட்டி

நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும்.

ஆறு:
ஆறென்னும் எண் உயிர் வரின் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.

ஆறு + ஆயிரம் - ஆறாயிரம்
கழஞ்சு - அறுகழஞ்சு
மணி - அறுமணி
வழி - அறுவழி

ஏழு:
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும்.

ஏழு + ஆயிரம் - ஏழாயிரம்
கழஞ்சு - எழுகழஞ்சு
மணி - எழுமணி
வகை - எழுவகை
ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு.

எட்டு:
எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும்.

எடடு + ஆயிரம் - எண்ணாயிரம்
கழஞ்சு - எண்கழஞ்சு
மணி - எண்மணி
வளை - எண்வளை

இத் திரிபுகளின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
---

ஒன்பது:
ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு ஆயிரமாவுந் திரியும்.

ஒனபது + பத்து - தொண்ணூறு

ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும்.

என்பது + நூறு - தொள்ளாயிரம்
இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
---

ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும்.

ஒன்று பத்து - ஒருபது, ஒருபஃது
இரண்டு இருபது, இருபஃது
மூன்று முப்பது, முப்பஃது
நான்கு நாற்பது, நாற்பஃது
ஐந்து ஐம்பது, ஐம்பஃது
ஆறு அறுபது, அறுபஃது
ஏழு எழுபது, எழுபஃது
எட்டு எண்பது, எண்பஃது
---
ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும்.

ஒருபது ஒன்று - ஒருபத்தொன்று
இருபது இரண்டு - இருபத்திரண்டு
முப்பது மூன்று கழஞ்சு - முப்பத்துமூன்று கழஞ்சு
மற்றவைகளு மிப்படியே
-----

பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும்.

பத்து இரண்டு - பன்னிரண்டு

பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.

பத்து ஒன்று - பதினொன்று
மூன்று - பதின்மூன்று
நான்கு - பதினான்கு
ஐந்து - பதினைந்து
ஆறு - பதினாறு
ஏழு - பதினேழு
எட்டு - பதினெட்டு
---

பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்..

பத்து ஒன்று - பதிற்றொன்று
இரண்டு - பதிற்றிரண்டு
மூன்று - பதிற்றுமூன்று
பத்து - பதிற்றுப்பத்து
நூறு - பதிற்றுநூறு
ஆயிரம் - பதிற்றாயிரம்
கோடி - பதிற்றுக்கோடி
கழஞ்சு - பதிற்றுக்கழஞ்சு
கலம் - பதிற்றுக்கலம்
மடங்கு - பதிற்றுமடங்கு
ஒன்பது ஒன்று - ஒன்பதிற்றொன்று
இரண்டு - ஒன்பதிற்றிரண்டு
மூன்று - ஒன்பதிற்றுமூன்று
பத்து - ஒன்பதிற்றுப்பத்து
நூறு - ஒன்பதிற்றுநூறு
ஆயிரம் - ஒன்பதிற்றாயிரம்
கோடி - ஒன்பதிற்றுக்கோடி
கழஞ்சு - ஒன்பதிற்றுக்கழஞ்சு
கலம் - ஒன்பதிற்றுக்கலம்
மடங்கு - ஒன்பதிற்றுமடங்கு

பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும்.

பத்து ஆயிரம் - பதினாயிரம்
கழஞ்சு - பதின்கழஞ்சு
கலம் - பதின்கலம்
மடங்கு - பதின்மடங்கு
ஒன்பது ஆயிரம் - ஒன்பதினாயிரம்
கழஞ்சு - ஒன்பதின்கழஞ்சு
கலம் - ஒன்பதின்கலம்
மடங்கு - ஒன்பதின்மடங்கு
----
ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும்.

ஒன்று ஒன்று - ஒவ்வொன்று
இரண்டு இரண்டு - இவ்விரண்டு
மூன்று மூன்று - மும்மூன்று
நான்கு நான்கு - நந்நான்கு
ஐந்து ஐந்து - ஐவைந்து
ஆறு ஆறு - அவ்வ

புணர்ச்சி விதி 19: 

ணகர னகர வீற்றுப் புணர்ச்சி:
ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயல்பாம்.
வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும்.
அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.
அல்வழி:
மண்சிறிது
மண்டீது
பொன் குறிது

வேற்றுமை:
மட்சாடி
மட்டூண்
பொற்கலம்
பொன்றீது
பொற்றூண்

கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும்,
விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம்.
மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
--—
ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம்.
அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.
அல்வழி:
மண்ஞான்றது
மண்ணீன்டது
மண்வலிது
பொன்ஞான்றது
பொன்னீண்டது
பொன்வலிது

வேற்றுமை:
மண்ஞாற்சி
மண்ணீட்சி
மண்வன்மை
பொன்ஞாற்சி
பொன்னீட்சி
பொன்வன்மை
 ——
தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.
அல்வழி:
 தூணன்று
அரணன்று
வானன்று
செம்பொனன்று

வேற்றுமை:
தூணன்மை
அரணன்மை
வானன்மை
செம்பொனன்மை
--—
பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
பாண்குடி உமண்சேரி அமண்பாடி பரண்கால் கவண்கால்
(பாண் - பாடுதற்றொழில். உமண் - உப்பமைதற்றொழில். அமண் - அருகனை வழிபடுவோர்).
--—
தன், என், என்னும் திரிபு மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும்.
தன்பகை
தற்பகை
என்பகை
எற்பகை

நின் என்னும் திரிபுமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.
நின்பகை

தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.
-—
குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம். . குயின்கடுமை - தேன்பெருமை ஊன்சிறுமை - மீன்கண் எயின்குடி - மான்செவி எகின்சிறுமை - மின்கடுமை குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள் தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.

புணர்ச்சி விதி 20:

மகரவீற்றுப் புணர்ச்சி:

மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும்.
எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
வேற்றுமை:
மரக்கோடு
நிலப்பரப்பு

பண்புத்தொகை:
வட்டக்கடல்
சதுரப்பலகை

உவமைத்தொகை
கமலக்கண்

எழுவாய்:
முரங்குறிது
யபங்கொடியேம்

உம்மைத்தொகை
நிலந்தீ

பெயரெச்சம்:
பயங்காக
செய்யுங்காரியம்
உண்ணுஞ்சோறு

வினைமுற்று:
தின்றனங்குறியேம்


உம்மையிடைச் சொல்:
சாத்தானுங்கொற்றனும்
பூதனுந் தேவனும்

மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம்.

தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.
----

தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.

அல்வழி. வேற்றுமை கங்குறிது.

கங்குறுமை
அஞ்சிறிது. அச்சிறுமை
செங்கோழி. நங்கை
தஞ்செவி
எந்தலை
---

மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

அல்வழி வேற்றுமை
மரஞான்றது மரஞாற்சி
மரநீண்டது மரமாட்சி
---

தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.

அஞ்ஞானம் நுஞ்ஞானம்
எந்நூல் தந்நூல்
---

மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.

மரவடி
மரவேர் (இவை வேற்றுமை)

வட்டவாழி
வட்டவடிவம் பண்புத்தொகை

பவளவிதழ்
பவளவாய் உவமைத்தொகை

மரமரிது
மரம்வலிது எழுவாய்

வலமிடம்
நிலம்வானம் உம்மைத்தொகை

உண்ணுமுணவு
ஆளும்வளவன் பெயரெச்சம்

உண்டனமடியேம்
உண்டனம்யாம் வினைமுற்று

அரசனுமமைச்சனும்
புலியும் யானையும் உம்மையிடைச்சொல்

செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும்.

வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.

புணர்ச்சி விதி 21:

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி:

லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரிலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.

பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை

வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை

வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை

குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய்

கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை

பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும்,
கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
----

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.

கல் குறிது கற்குறிது
முள் சிறிது முட்சிறிது
 எழுவாய்

அல் பகல் அட்பகல்
உள் புறம் உட்புறம்
உம்மைத்தொகை

நெல், செல், கொல், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கொற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த் தொடரிலும் உறழாது திரிந்தே வரும்.
செல் - மேகம், கொல் - கொல்லன்
உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியவிகாரப்பட்டும் திரிந்தும் வருதல். உறழ்ச்சி எனினும், விகற்ப்பவினுமெனினும் ஓங்கும்.

கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்த ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.
----

அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.

அல்வழி வேற்றுமை
கற்றீது கற்றீமை
முட்டீது முட்டீமை
---

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.

கற்றீது கஃறீது
முட்டீது முஃடீது
---
தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.

வேறீது வாடீது
தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்
தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்
காறலை தாடலை - உம்மைத்தொகை
உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்
பயிறோகை அருடேவன் - வினைத்தொகை
குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்
வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.
நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.
---
லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.


கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி
வில் - வின்னீண்டது வின்னீட்சி
புல் - புன்டாண்டது புன்மாட்சி
முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி
புள் - புண்ணீண்டது புண்ணீட்சி
கள் - கண்மாண்டது கண்மாட்சி
-----

தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
வேனன்று வேனன்மை
பொருணன்று பொருணன்மை
-----
லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்

அல்வழி வேற்றுமை
கல்யாது கலயாப்பு
விரல்வலிது விரல்வன்மை
முள்யாது முள்யாப்பு
வாள்வலிது வாள்வன்மை

புணர்ச்சி விதி 22:

விதியில்லாத் திரிபுகள்
----
விதியின்றி திரிந்து வருவனவுஞ் சிலவுள. அவை

மருவி வழங்குதல்,
ஒத்து நடத்தல்,
தோன்றல்,
திரிதல்,
கெடுதல்,
நீளல்,
நிலை மாறுதல்

என எழுவகைப் படும்.
அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.
---
1. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.

அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை
பாண்டியனாடு - பாண்டி நாடு
சோழநாடு - சோணாடு
மலையமானாடு - மலாடு
தொண்டைமானாடு - தொண்டைநாடு
தஞ்சாவூர் - தஞ்சை
சென்னபுரி - சென்னை
குணக்குள்ளது - குணாது
தெற்குள்ளது - தெனாது
வடக்குள்ளது - வடாது
என்றந்தை - எந்தை
நுன்றந்தை - நுந்தை
---

2. ஒத்து நடத்தலாவது, ஓரெழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வருமாறு :-
அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

அகம் - அகன்
முகம் - முகன்
நிலம் - நிலன்
நலம் - நலன்

மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

பசல்
மஞ்சு
மயல் பைசல்
மைஞ்சு
மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது

அமச்சு
இலஞ்சி
அரயர் அமைச்சு
இலைஞ்சி
அரையர் மொழியிடையில்
ஒத்து நடந்தது

ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

நண்டு
நெண்டு
நமன் ஞண்டு
ஞெண்டு
ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது

ஐந்நூறு
மைந்நின்ற கண் ஐஞ்ஞூறு
மைஞ்ஞன்ற கண் ஐகாரத்தின் பின்
ஒத்து நடந்தது

சேய்நலூர்
செய்நின்ற சேய்ஞலூர்
செய்ஞ்ஞன்ற
 யகரத்தின் பின் ஒத்து நடந்தது

ஒரொவிடத்து அஃறிணைப் பெயரொற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

சாம்பல் - சாம்பர்
பந்தல் - பந்தர்
குடல் - குடர்
அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

அரும்பு - அரும்பர்
கரும்பு - கரும்பர்
கொம்பு - கொம்பர்
வண்டு - வண்டர்

ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்
பொள்ளாமணி - பொல்லாமணி
---

3. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

யாது - யாவது
குன்றி - குன்றம்
செல் உழி - செல்வுழி
விண் அத்து - விண்வத்து
----

4. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.

மாகி - மாசி
மழைபெயின் விளையும் - மழைபெயில் விளையும்
கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு
உயர்திணைமேலே - உயர்திணை மேன்
---

5. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.

யாவர் - யார்
யார் - ஆர்
யானை - ஆனை
யாடு - ஆடு
யாறு - ஆறு
எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
---
6. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.

பொழுது - போழ்து
பெயர் - பேர்
---
7. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.

வைசாகி - வைகாசி
நாளிகேரம் - நாரிகேளம்
மிஞிறு - ஞிமிறு
சிவிறி - விசிறி
தசை - சதை
இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.

கண்மீ - மீகண்
நகர்ப்புறம் - புறநகர்
புறவுலா - உலாப்புறம்
இன்முன் - முன்றில்
பொதுவில் - பொதியில்
முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின

தமிழ் இலக்கணம் இவ்வளவு விரிவானதா என்றும் இத்தனை புணர்ச்சி விதிகளையும் எப்படிநினைவில் வைத்துக் கொள்வது என்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதெனின்.... ஆங்கிலத்தில் எழுத்துக்கள் 26 மட்டுமே என்று நாம் நினைத்தாலும் அதன் ஒவ்வொரு சொல்லின் எழுத்துக்களையும் (spelling) மனப்பாடம் செய்தே தீர வேண்டும் என்றும், அவ்வாறு 50,000 சொற்களின் எழுத்தமைவை மனப்பாடம் செய்து வைத்துள்ள நமக்கு இந்த 22 விதிகள் ஒன்றும் கடிதல்ல என்றும் ஓர்க...

 மேலும் இவற்றுள் பல, நாம் அறிந்தவையே...
மேலும் படிக்க »