பெருந்தகையீர்,
இன்று நாம் கற்கவிருக்கும் குறள், 'குற்றங்கடிதல்' என்னும் அதிகாரத்தில்
(அதி.44) இடம்பெற்றுள்ள குறள்களில்
ஒன்றாகும்.
குற்றங்கடிதல் என்றால், ஒருவரிடமுள்ள
குற்றத்தைக் களைதல் அல்லது விலக்குதல்
எனப்பொருள்படும்.ஒருவரிடம் உள்ள
குற்றங்கள் அல்லது குறைப்பாடுகள் யாவை என்பதையும் அவற்றைக் களையும்
வகையினையும் எடுத்துரைக்கும் பாங்காக
இவ்வதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தன்மையிலான ஒரு குறளைக்
காண்போம்.
மூலபாடம்:-
""""""""""""'"'""'
"தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங்
காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.". (#436)
உரைநடைப் பாடம்:
""""""""""""""""""""""""""""""
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம்
காண்கிற்பின்,
என்குற்றம் ஆகும் இறைக்கு?
= தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம்
காண்கிற்பின், இறைக்கு ஆகும்
குற்றம் என்?
சொற்பொருள்:
"""""""""""""""""""""""""
#தன்குற்றம் நீக்கி = முதலில் தன்னிடமுள்ள
குற்றம் என்னவென்பதைக் கண்டு
பிடித்து அதனைக் களைந்தபின்;
#பிறர்குற்றம் காண்கிற்பின் =
பிறரிடம் உள்ள குற்றத்தைக்
காணக் கூடுமாயின்;
#இறைக்கு ஆகும் குற்றம் என் ? =
அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாதோ?
விளக்கம்/ கருத்து:
""""""""""""""'""""""""""""""""
அரசன் முதலில் தன்னிடமுள்ள
குற்றத்தை ஆய்ந்து அதனை விலக்கிக் கொண்டபின், பிறர் குற்றங்களைக்
களைய முயல்வாரேயானால், அதனால்
அவ்வரசர்க்கு ஏற்படக்கூடிய தீமை
என்னவாகும் - என்ற வள்ளுவரின் வினா,
அரசியல் பகுதியில் இடம்பெற்றிருப்தால்,
இஃது ஓர் அரசர்க்குக் கூறியவாறு
அமைந்திருப்பினும்,
திருக்குறளிலுள்ள அறம்,பொருள்
பற்றிய நெறிகளெல்லாம், தனிமாந்தர்
ஒவ்வொருவருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்ட நெறிகளெனக் கொள்ளவேண்டும் என்பதை நாம் மறத்தலாகாது!
அவ்வாறே, இக்குறளில் சொல்லப்பட்டுள்ளதும், மாந்தரிடம்
இயல்பாகவேயுள்ள குற்றத்தை- அதாவது, தம்மிடமுள்ள குற்றங்களைப் பற்றி எண்ணாமல் பிறரிடம் உள்ள குற்றங்கைப் பற்றியே வசைபாடும் போக்கினைக் கண்டிப்பதற்காகவே- உணர்த்தும் பொருட்டாகக் கூறப்பட்டதெனக் கொள்ள
வேண்டும்.
ஆகவே, இக்குறளால் நாமறிவது,
முதலில் நம்மிடமுள்ள குறையை அகற்றிய
பின்னரே, பிறரிடமுள்ள குறையைப்பற்றிக்
கூறும் தகுதியைப் பெறுதல் வேண்டும்
என்பதேயாகுமெனக் கொள்க!
" ஊரைத் திருத்தும் முன், உன்னைத்
திருத்திக்கொள்!"
என்னும் பழங்கூற்றினையும் இங்கு
நினைவுகூர்க!.
நன்றி.
19/10/2015
திருக்குறளில் காணப்படும்
அருஞ்சொல்- சொற்றொடர்
அகரமுதலியும் இணையான
குறள்களும்.
பேரன்புடையீர், வணக்கம்.
இன்று முதல், திருக்குறளில் உள்ள
அருஞ்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கான பொருள்களையும்
அவை இடம்பெற்றுள்ள குறள்களையும்
ஒவ்வொன்றாகக் காணத்தொடங்குவோம்.
001) அஃகாமை = அஃகுதல் என்றால்
சுருங்குதல், குறைதல் எனப்படும்.
அஃகாமை எனில், அதற்கு
எதிர்மறையாக- சுருங்காமை
(சுருங்காதிருத்தல்), அல்லது
குறையாமை (குறையாதிருத்தல்)
எனப்படும்.
இச்சொல் 'வெஃகாமை' என்னும் 18- வது
அதிகாரத்தில், குறள் எண்:178 -இல்
உள்ளது.
இனி, அக்குறளைப் பார்ப்போம்.
"அஃகாமை செல்வத்திற் கியாதெனின்
*****************************************
வெஃகாமை
*****************
வேண்டும் பிறன்கைப் பொருள்."
**************************************
இக்குறளைச் சீர்பிரித்துப் பார்ப்பின்,
'அஃகாமை செல்வத்திற்கு யாது?' எனின்,
வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள். -
என்று ஆகும்.
இக்குறளுக்கான விளக்கம்:-
ஒருவரிடமுள்ள செல்வம் சுருங்காமல் இருப்பதற்கான வழி என்னவென்றால்,
அவர் பிறருக்குரிய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதேயாகும்..
என்றவாறு.
இஃது, இன்று நாம் அறிந்துகொண்ட பொருளும் குறளும் ஆகும்.
நன்றி. இன்னும் தொடர்வோம்.....