முகம் ? மூஞ்சி ?

முகம் என்றால் என்னவோ..? மூஞ்சி என்றால் என்னவோ..?
முகம் - மாந்தன்
மூஞ்சி- விலங்கு
மூஞ்சி என்பது மூக்கும் வாயும் மட்டும்
முகம் என்பதோ முகமொத்தமும்...
விலங்குகளுக்கு மூக்குவாய் சற்று முன்னோக்கித் தள்ளப்பட்டிருக்கும்...
கண்ணோடும் செவியோடுஞ் சேர்ந்த மூஞ்சியே முகம் என்பார் பாவாணர் ஐயா...
மேலும் படிக்க »

துன்ப வகைப்பாடு

துன்பம் :

இல்லாது போனதால் உண்டாகுந் துன்பம் = அல்லல்.

தொலைவில் போனதால் உருவாகுந் துன்பம் = தொல்லை.

நெருங்கி இருப்பதால் உண்டாகுந் துன்பம் = நெருக்கடி.

இவற்றில் அந்தந்த சொல்லை தகுந்த இடங்களில் எடுத்து ஆளலாம் ..

- அரங்கன் ஐயா
மேலும் படிக்க »

திருக்குறள் போற்றி : தொகுப்பாளர். இரா. இளங்குமரனார்

கந்த சஷ்டி அல்லது சுப்பிரபாதம் காலை எழுந்தவுடன் கேட்பது சில வீட்டாரின் வழக்கம். கடவுளர் துதி பாடுவதை கேட்பதினால் உண்டாகும் பயனறியேன். நம் வள்ளுவர் அருளிய திருக்குறளை துதி வடிவில் நம் பிள்ளைகளும் நாமும் நாள்தோறும் கேட்டால் வள்ளுவர் கூறும் அறம் மனதில் பதியுமல்லவா ? உங்களுக்காக "போற்றிக்குறல்" .



திருக்குறள் போற்றி

தொகுப்பாளர். இரா. இளங்குமரனார்

திருவள்ளுவர் கண்ட முழுமுதல் இறைமை வழிபாடு, உள்ளொளி மிக்க உயர்நத குருவர் வழிபாடு, உலக நலங்காக்கும் பண்பு நல வழிபாடு, என்பவற்றை அவர்தம் வாக்கும் நோக்கும் கொண்டு ஆக்கப்பட்டது இப் போற்றித் தொகுப்பாகும். தனிப்பேரிறைமை, தவப்பெருங்குருவர், தண்ணளிப் பண்பாடு என்பவற்றைத் தாய்மொழி வழியாக நினைந்து நினைந்து உணர்நது உணர்ந்து உருகி உருகிப் போற்றுவதே உலகொத்த ஒரு நெறியாகும். அந்நெறியை நெஞ்சார உணர்ந்து நேயத்தால் போற்றி உயிர் தளிர்க்கச் செய்யுமாறே இப்போற்றி ஆக்கப் பெற்றதாகும்.

திருக்குறளை ஓதினால் உயர்வு கிட்டும்,
திருக்குறளை ஓதினால் பண்பாடு தானே வரும்,
திருக்குறளை ஓதினால் மனமாசு ஒழியும்,
திருக்குறளை ஓதினால் நோய் நொடி நீங்கும்,
திருக்குறளை ஓதினால் உயிர் தளிர்த்து நீடு வாழலாம்,
திருக்குறளை ஓதினால் தெய்வநிலை எய்தலாம்.

ஆதலால் திருக்குறறை ஓதிச் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் வாழ்வும் வளமும் பெற்றுச் சிறப்பெனும் செம்பொருள் கண்டு பேராப் பெருநிலை எய்தலாம். இதனை எண்ணிப் பயன்பெற்று வரும் பட்டறிவால் படைக்கப் பெற்றதே இப்போற்றி. ஆதலால், இதனை ஓதியும் உணர்ந்தும் வழிபட்டும் ஒளிமிக்க வாழ்வை ஒவ்வொருவரும் அடைவாராக.
அகர முதலாம் ஆதியே போற்றி (1)
மலர்மிசை ஏகும் மானடி போற்றி (3)
தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி (7)
எண்குணத் திலங்கும் இறையே போற்றி (9)
அமிழ்த மழையாம் அருளே போற்றி (11)
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி (24)
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி (28)
குணமெனும் குன்றே குறியே போற்றி (29)
மனத்தில் மாசிலா மணியே போற்றி (34)
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி (50)

மங்கல மனையற மாட்சியே போற்றி (60)
அறிவறி பண்புப் பேறே போற்றி (61)
அன்போ டியைந்த வழக்கே போற்றி (79)
வருவிருந் தோம்பும் வளமே போற்றி (83)
இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி (99)
செய்யாமற் செய்யும் செழுநலம் போற்றி (101)
காலத் துதவும் கனிவே போற்றி (102)
நெஞ்சங் கோடா நெறிநிலை போற்றி (118)
நிலையில் திரியா மலையே போற்றி (124)
ஓழுக்கம் குறையா உரமே போற்றி (139)

பொறுக்கும் அழியாப் புகழே போற்றி (156)
அழுக்கா றில்லா அறனே போற்றி (163)
அறனறிந்து வெஃகா அறவே போற்றி (179)
புறஞ்சொலல் அறியாப் பொலிவே போற்றி
பயனில பகராப் பண்பே போற்றி (197)
பிறன்கே டெண்ணாப் பெருமையே போற்றி
ஒத்த தறியும் உயர்வே போற்றி (214)
ஊருணி நீராம் உடைமையே போற்றி (215)
பயன்மரம் ஆகும் பரிவே போற்றி (216)
மருந்து நலமாம் மாண்பே போற்றி (217)

வறியார்க் குதவும் வாழ்வே போற்றி (221)
பசித்துயர் மாற்றும் பரமே போற்றி (225)
வசையிலாப் புகழே வானே போற்றி (240)
தன்னுயிர் அஞ்சாத் தகவே போற்றி (244)
அல்லல் அறியா அருளே போற்றி (245)
உயிரழித் துண்ணா ஒளியே போற்றி (259)
தன்னுயிர் தானறு தவமே போற்றி (268)
கூற்றையும் வெல்லும் நோற்றலே போற்றி
அளவறி நெஞ்சத் தறமே போற்றி (288)
உள்ளத்தாற் பொய்யா ஒழுக்கமே போற்றி

வெகுளியை மறக்கும் விரிவே போற்றி (303)
இன்னாமை எண்ணா இனிமையே போற்றி
பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி (322)
நிலைபே றுணரும் நிலையே போற்றி (331)
பற்றது பற்றாப் பற்றே போற்றி (348)
மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி
ஐயம் அணுகாத் தெளிவே போற்றி (354)
சிறப்பெனும் செம்பொருட் செறிவே போற்றி
பேரா இயற்கைப் பெற்றியே போற்றி (370)
அசையா உறுதி ஆக்கமே போற்றி (371)

முறைசெய் தருளும் இறையே போற்றி (388)
உலகின் புறத்தா னின்புறவே போற்றி (388)
நுண்மாண் நுழைபுல நோன்பே போற்றி (407)
ஆவ தறியும் அறிவே போற்றி (427)
எதிரதாக் காக்கும் இயல்பே போற்றி (429)
வரும்முன் காக்கும் வாழ்வே போற்றி (435)
அறனறி மூத்த அறிவே போற்றி (441)
பெரியரிற் பெரிய பேறே போற்றி (444)
மன்னுயிர்க் காக்க மனநலம் போற்றி (457)
தக்கதே செய்யும் தகைமையே போற்றி (466)

அமைந்தாங் கொழுகும் அளவே போற்றி
செய்தற் கரிய செய்கையே போற்றி (489)
அஞ்சாத் துணிவே துணையே போற்றி (497)
திறந்தெரிந் தறியும் தெளிவே போற்றி (501)
வாரி பெருக்கும் வகையே போற்றி (512)
அளவ ளாவும் அமிழ்தே போற்றி (523)
சுற்றம் சுற்றும் சுடரே போற்றி (524)
புகழ்ந்தவே புரியும் புகழே போற்றி (538)
கோலது கோடாக் கொற்றமே போற்றி (546)
குடிபுறங் காக்கும் குணமே போற்றி (549)

ஒத்தாங் கொறுக்கும் உரனே போற்றி (561)
கண்ணோட்டம் என்னும் கவினே போற்றி
உள்ளம் உடைமையாம் உடைமையே போற்றி (592)
நீரள வுயரும் மலருளம் போற்றி (595)
குடியெனும் குன்றா விளக்கே போற்றி (601)
அறிவறிந் தாற்றும் ஆள்வினை போற்றி (618)
அடுக்கும் இடுக்கணை அழிப்பாய் போற்றி
இன்பத் தின்பம் விரும்பாய் போற்றி (629)
மதிநுட்பம் நூலோ டுடையாய் போற்றி (636)
உலகத் தியற்கை உணர்வோய் போற்றி (637)

நிரந்தினிது சொல்லும் நீர்மையே போற்றி
வேண்டிய எலாம்தரும் வினைநலம் போற்றி
நடுக்கறு காட்சி நயனே போற்றி (654)
சொல்லிய செய்யும் சுடரே போற்றி (664)
வீறெய்து மாணபாம் வினைத்திறம் போற்றி
நூலாருள் நூல்வலல் நுண்மையே போற்றி
தூய்மை துணைமை துணிவே போற்றி (686)
போற்றிற் கரியவை போற்றியே போற்றி
குறிப்பிற் குறிப்புணர் குறிப்பே போற்றி (703)
ஒளியார் முன்னுறும் ஒளியே போற்றி (714)

கற்றவை செலச்சொல் கலையே போற்றி
நாடா வளத்ததாம் நாடே போற்றி (739)
அன்பீன் குழவியாம் அருளே போற்றி (757)
அருள்வளர் செவிலிப் பொருளே போற்றி (757)
நிறைநீர நீரவர் கேண்மையே போற்றி (782)
உள்ளம் பெருகுவ உள்ளுகை போற்றி (798)
கேளிழுக்கம் கேளாக் கெழுதகை போற்றி
இகலெனும் எவ்வம் இல்லாய் போற்றி (853)
பகைநட்பாக் கொள்ளம் பண்பே போற்றி
அளவறிந் துண்ணும் அறிவே போற்றி (943)

செப்பமும் நாணும் சேர்வே போற்றி (951)
பெருக்கத்து வேண்டும் பணிவே போற்றி (963)
உள்ள வெறுக்கையாம் ஒளியே போற்றி (971)
கொல்லா நலத்ததாம் நோன்மையே போற்றி (994)
நயனொடு நலம்புரி பயனே போற்றி (994)
சீருடைச் செல்வ மாரியே போற்றி (1010)
கருமத்தால் நாணும் நாணே போற்றி (1011)
உழுதுண்டு வாழும் வாழ்வே போற்றி (1033)

அகர முதலாம் ஆதியே போற்றி போற்றி
மேலும் படிக்க »

அறம் பொருள் இன்பம் : வள்ளுவர் மாண்பு

அறம் பொருள் இன்பம் :

தமிழர் தம் வாழ்வில் கொண்டொழுகு பற்றுறுதிகள் மூன்று... அவை அறம், பொருள், இன்பம் என்பவையாம்.

இவற்றின் பொருள் என்ன?

பரந்து விரிந்த, ஆழ்ந்து அகன்ற, பொருள் தரும் இச்சொற்களின் வரையறையை, மணிச்சுருக்கமாக வள்ளுவர் உரைக்கும் மாண்பினைக் காண்க...

அறம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம் #34

அஃதாவது, மனத்தில் மாசு இல்லாது இருக்கும் நிலையே அறமாகும். அவ்வளவே.

பொருள் :

திறனறிந்து தீதின்றி வந்த பொருள் #754

செய்யும் திறப்பாட்டினை அறிந்து, தீய வழிகளல்லாத நல்வழிகளில் வருவதே பொருள்

இன்பம் :

அறத்தான் வருவதே யின்பம் #39

அறம் வழி நின்று வாழ்தலால் வருவதே இன்பமாகும்.


என்னே வள்ளுவர் மாண்பு!!!

- அரங்கன் ஐயா 
மேலும் படிக்க »

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள்

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு
மேலும் படிக்க »

எழுத்திலக்கணம் நான்காம் பாகம்

இதுவரை... 
எழுத்தாவது யாதென்றும்,
அவற்றின் எண்ணிக்கை, பெயர், உருவம், மாத்திரை, முதனிலை, ஈறுநிலை, போலி என்பனவற்றைக் கற்றோம்.
பின்னர் எழுத்துகள் சேர்ந்து பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு என்ற ஆறு உறுப்புகளாக உருப்பெற்று, ஒரு சொல்லாக உருவாவதைக் கண்டோம்.
அச்சொற்கள் பெயர், வினை, இடை மற்றும் உரி என்ற பிரிவுகளைக் கொண்டன என்பதைக் கண்டோம்.
அப்பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் என்றும், அவை பொருள், இடம், காலம், சினை, பண்பு மற்றும் தொழில் ஆகியவை என்றும் எடுத்துக்காட்டுகளோடு கண்டோம்...
வினைச்சொல்லின் முற்று எச்சம் என்ற பிரிவுகளும், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற ஆறு வகைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் கண்டோம்..

இனி ஒரு சொல்லாவது, 
பெயர்ச்சொல்லாகவோ 
வினைச்சொல்லாகவோ 
இடைச்சொல்லாகவோ 
உருவாவது எதனால் என்றால், 

அச்சொற்களில் உள்ள பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு ஆகிய உறுப்புககளாலேயே என்றும், அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றையும்
குறித்து மேலும் தெளிவு பெற வேண்டின், எழுத்திகாரம் சொல்லும் இலக்கண நூலைக் காண்க என்றும் கூறி சொல்லுருவாக்கம் இதோடு இங்கு முடிக்கப்படுகிறது..

இனி எழுத்ததிகாரத்தின் கடைசி உறுப்பான புணர்ச்சிக்கு வருவோம்...
எழுத்திலக்கணத்தின் உறுப்புகள்

1. எண் 
2. பெயர்
3. முறை
4. பிறப்பு
5. உருவம்
6. மாத்திரை
7. முதனிலை
8. ஈறுநிலை
9. இடைநிலை
10. போலி
11. சொல்லுருவாக்கம்
12. புணர்ச்சி

இதில் நாம் 12ஆம் உறுப்பான புணர்ச்சியை இன்று கற்கவுள்ளோம்..

புணர்ச்சியாவது என்ன என்றால் இருசொற்கள் இணையும் போது நிகழ்பவையே புணர்ச்சி என்க.

புணர்தல் என்றால் சேர்தல் இணைதல் என்று பொருள்.

இரு சொற்கள் சேரும்போது, நிற்கும் சொல்லை நிலைமொழி என்றும் அந்நிலைமொழியோடு வந்து சேரும் சொல்லை வருமொழி என்றும் அழைக்கப்படும்..

எ-டு: மற்று + ஒன்று = மற்றொன்று

இங்கு மற்று நிலைமொழியாம், ஒன்று வருமொழியாம் என்க.

புணர்ச்சியாவது நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணர்வதாம்.

குறிப்பு: புணர்ச்சிக்குள் புகும் முன்னர் இதுவரை கண்ட எழுத்தின் இலக்கணங்களை மேலும் ஒருமுறை தெளிவுறக் கண்டு கொள்க... எழுத்தின் வகைகள், குற்றியலுகரம் என்றால் என்ன, எழுத்தின் முதனிலை ஈறுநிலை என்றால் என்ன... அதாவது, சொல்லின் முதலிலும் இறுதியும் வரும் வராத எழுத்துகள் எவையெவை என்பதை மீண்டும் ஒருமுறை சிந்தித்துக் கொள்க...

புணர்ச்சியாவது, நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணர்வதாம்.
---
அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல்வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும். 

வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொற்கள் புணர்வதாம்.
எ-டு

மரம்வெட்டினான் .. மரத்தை வெட்டினான்

கல்லெறிந்தான் .. கல்லாலெறிந்தான்

கொற்றன்மகன் .. கொற்றனுக்கு மகன்

மலைவீழருவி .. மலையின் வீழருவி

சாத்தன்கை .. சாத்தனதுகை

மலைநெல் .. 
மலையின்கணெல்
இவை வேற்றுமை உருபுகள் எனப்படும்


நம்பி 
– முதல் வேற்றுமை (பெயர் வேற்றுமை)

நம்பியை 
– இரண்டாம் வேற்றுமை (ஐ வேற்றுமை)

நம்பியால் – மூன்றாம் வேற்றுமை (ஆல் வேற்றுமை)

நம்பிக்கு – நான்காம் வேற்றுமை (கு வேற்றுமை )

நம்பியின் – ஐந்தாம் வேற்றுமை (இன் வேற்றுமை)

நம்பியது – ஆறாம் வேற்றுமை (அது வேற்றுமை)

நம்பி கண் 
– ஏழாம் வேற்றுமை (கண் வேற்றுமை)

நம்பீ – எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை) 

நம்பி கண்டான் - பெயர் - செய்பொருள்

நம்பியைக் கண்டான் - ஐ - செயப்படுபொருள்

நம்பியால் பெற்றான் - ஆல் - கருவிப்பொருள்

நம்பிக்குக் கொடுத்தான் - கு - கொடைப்பொருள்

நம்பியின் பிரிந்தான் - இன் - நீங்கல்பொருள்

நம்பியது வீடு - அது - கிழமைப்பொருள்

நம்பிகண் செல்வம் - கண் - இடப்பொருள்

நம்பீ! வா - விளி - விளிப்பொருள் 

இந்த உருபு தோன்றியும் மறைந்தும் வரும் என்க...

தோன்றி வருதல் வேற்றுமை விரி எனப்படும்...
எ-டு. தமிழைக் கற்போம் (இரண்டாம் வேற்றுமை விரி)

மறைந்து வந்து பொருளை உணர்த்துதல் தொகை எனப்படும்..

தமிழ் கற்போம் (ஐ எனும் உருபு மறைந்து வந்த இரண்டாம் வேற்றுமைத் தொகை)...
தொக்கி வருதல் தொகை எனப்பட்டது... 

தொகை என்றால் மறைத்துக்
காட்டல் என்க.... to show by hiding something என்று பொருள்... 

தொகை என்னும் ஆழ்ந்த பொருள்தரும் சொல் வேறு மொழியில் உள்ளதா என்று தெரியவில்லை..

29/10/2015
அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். 

அது, 

வினைத்தொகை, 
பண்புத்தொகை, 
உவமைத்தொகை, 
உம்மைத்தொகை, 
அன்மொழித்தொகை, 

என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், 
எழுவாய்த்தொடர், 
விளித்தொடர், 
தெரிநிலை வினைமுற்றுத் தொடர், 
குறிப்பு வினைமுற்றுத்தொடர், 
பெயரெச்சத்தொடர், 
வினையெச்சத்தொடர், 
இடைச்சொற்தொடர், 
உரிச்சொற்றொடர், 
அடுக்குத்தொடர், 
என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு எடுத்துக்காட்டு
(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை 
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்கள் எடுத்துக்காட்டு
(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை ..உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்


தொகை என்பது தொக்கி நின்று அதாவது மறைந்து நின்று காட்டுவதாம்... 

வினைத் தொகை

வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும். பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும், காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு, வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும். அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம் என்பர். கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.

(எ-டு) வீசு தென்றல்

இத்தொடரை விரித்துக் கூறும்பொழுது, வீசிய தென்றல், வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்திவரக் காணலாம். இவ்வாறு வினைத்தொகை முக்காலமும் குறித்து வருமானால் அவை முக்கால வினைத் தொகைகள் எனப்படும்.

வீசிய, வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின் விகுதியும் காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின் முதல்நிலையான வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும் பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.

சில வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.

(எ-டு) வருபுனல்

இவ்வினைத்தொகையில் வா என்னும் வினைப் பகுதியான முதல்நிலை வரு எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு வந்தது.

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை 
ஊறுகாய் சுடுசோறு போன்று... 

நேற்றும் ஊறுகாய் ஊறியது... இன்றும் ஊறிக்கொண்டு இருக்கிறது... நாளையும் ஊறும்... எனவே அதை ஊறுகாய் என்று முக்காலமும் உணர்த்துமாறு சொல்கிறோம்...

பண்புத் தொகை

பண்புத் தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும்.

பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.

பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.

ஆகிய என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் இடைச்சொல். இதனைப் பண்பு உருபு என்பர்.

(எ-டு)

செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை
வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை
முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை
இன்சொல் - சுவைப் பண்புத் தொகை

இவை விரியும்பொழுது, செம்மையாகிய தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என விரியும்.

மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் செந்தாமரை என்பது செம்மை ஆகிய தாமரை என விரியும் எனப் பார்த்தோம். இவற்றுள் செம்மை என்பது பண்பு; ஆகிய என்பது பண்பு உருபு; தாமரை என்பது பண்பி. இதேபோல மற்ற எடுத்துக்காட்டுகளைப் பிரித்து அறிந்து கொள்க.

பண்புத்தொகையில் ஒருவகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவதாகும்.

(எ-டு)

தலைவர் அப்துல்கலாம்
பலா மரம்

முதல் தொடரில் தலைவர் என்னும் சொல் பொதுப் பெயர். அப்துல்கலாம் என்னும் பெயர் சிறப்புப் பெயர். இத்தொடர் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பொதுப் பெயரும் சிறப்பு பெயரும் ஒருவரையே குறித்து வந்தது கவனிக்கத்தக்கது.

இரண்டாம் தொடரில் பலா என்பது மர வகைகளில் ஒன்றின் சிறப்புப் பெயர். மரம் என்பது பொதுப் பெயர். இத்தொடர் சிறப்புப் பெயரொடு பொதுப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் ஒரு பொருளையே குறித்து வந்தன.

தலைவர், பலா என்னும் சொற்கள் பண்புப் பெயர் ஆகாவிடினும்
பண்புத் தொகை போல ஆகிய என்னும் உருபு பெற்று ஒரு பொருளைச் சிறப்பிப்பதனால் இத்தொடர்கள் பண்புத் தொகைத் தொடர்களாகக் கருதப் பெறுகின்றன.

உவமைத் தொகை

உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.

போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.

(எ-டு.) பவளவாய்

இது பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம் என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபு; வாய் என்பது உவமேயம். (உவமானம் - உவமையாகும் பொருள்; உவமேயம் - உவமிக்கப்படும் பொருள்.)

இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும். (மெய் - வடிவம்; உரு - வண்ணம்.)

(எ-டு.)
புலி மனிதன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயனுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருவுவமைத் தொகை

இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.

30/10/15

உம்மைத் தொகை

அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.

எ-டு :

ஒன்றேகால் - எண்ணல் அளவை உம்மைத் தொகை
தொடியேகஃசு - எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால் படி - முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி அங்குலம் - நீட்டல் அளவை உம்மைத் தொகை
இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும், தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.

மற்ற தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத தனிச் சிறப்பு இவ்வும்மைத் தொகைக்கு உண்டு. மற்ற தொகைநிலைத் தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில் மட்டுமே மறைந்து வரும். உம்மைத் தொகையில் இரண்டு சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் உம் என்னும் உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

அன்மொழித் தொகை

அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள். மொழி என்றால் சொல் என்று பொருள். கூறப்படும் தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது. இது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும். இது,

1) வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2) வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
3) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
4) உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
5) உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

என ஐந்து வகைப்படும்.

1. வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம் வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.

(எ-டு) பூங்குழல் வந்தாள்

பூங்குழல் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) பொற்றொடி வந்தாள்

பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர், ‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கவியிலக்கணம்

கவியிலக்கணம் என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது, நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) பொற்றாலி

பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கிள்ளிகுடி

கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

(எ-டு) கீழ் வயிற்றுக் கழலை

கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர், ‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது, ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.


2. வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

(எ-டு) தாழ்குழல் பேசினாள்

தாழ்குழல் என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

3. பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) கருங்குழல்

கருங்குழல் என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது, பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

4. உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) தேன்மொழி

தேன்மொழி என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

5 உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) உயிர்மெய்

உயிர்மெய் என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

அல்வழித் தொகாநிலைத் தொடர் என்பது,
அல்வழிக்கு உரிய தொகைகளான வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியன நீங்கலாக, தமக்கெனத் தனி உருபுகள் இல்லாத ஏனைய தொகாநிலைத் தொடர்கள் தொடரும் தொடராகும். இத்தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்... அவை

எழுவாய்த்தொடர், 
விளித்தொடர், 
தெரிநிலை வினைமுற்றுத் தொடர், 
குறிப்பு வினைமுற்றுத்தொடர், 
பெயரெச்சத்தொடர், 
வினையெச்சத்தொடர், 
இடைச்சொற்றொடர்,
உரிச்சொற்றொடர், 
அடுக்குத்தொடர் 
இவ்வாறு தொக்கியும் தொகாதும் வரும்போது சொற்கள் எப்படிப் புணர்கின்றன என்பதே புணர்ச்சியாம் என்க...
மேலும் படிக்க »