அளபெடை என்பது என்ன ? : குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

செய்யுளில் ஓசை குறையும்போதும்,
சீரும், சீர்களுடன் இணையும் தளைகளும் சிதையும்போதும்,  செய்யுள் இலக்கணத்தில் குற்றம் ஏற்படும். அதனை
நிறைவு செய்வதற்கும், செய்யுளின் ஓசை
இனிமையாக அமையும் பொருட்டும்,
செய்யுளின் சிலவிடங்களில் அளபெடைகள்
அமைத்து இயற்றப்படுகின்றன.


       அதாவது, 
*  ஒரு நெடில் தனக்கு இனமான குறிலை
    உடன்சேர்த்துக் கொள்ளும்.


* குறிலாக இருந்தால், அது நெடிலாக 
   மாறித் தன்னினத்தை அளபெடுத்துக் 
   கொள்ளும்.


* சில வேளைகளில், ஓர் ஒற்றெழுத்தும்
   தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்)
    கொள்வதும் உண்டு.



    + அளபெடுத்தல் என்பது, செய்யுளிலுள்ள
        நின்றசீர், வருஞ்சீர்க்கு ஏற்பத் தன்
        அமைப்பில் மாற்றம் செய்துகொள்ளும்
        வகையாகும்.


    + இவ் அளபெடை என்பது :-


(1) இசைநிறை அளபெடை -அல்லது
       செய்யுளிசை அளபெடை;


(2) இன்னிசை அளபெடை;


(3) சொல்லிசை அளபெடை


(4) ஒற்றளபெடை


      என நான்கு வகைப்படும்.


இவற்றை விரிவாகக் காண்போம்.




(1) இசைநிறை அளபெடை அல்லது
***************************************
      செய்யுளிசை அளபெடை:-
**********************************


     இது, செய்யுளில் ஓசை குறையும்போதும்,
      சீரும் தளையும் சிதையும் போதும் , 
     அசையை நிறைப்பதற்காக
      அளபெடுக்கும்.


எ- கா:-


" ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர். ".    (குறள்# 653)


   இக்குறளில் 'ஓ' என்னும் உயிர்நெடில்
தனக்குரிய இனக்குறில் 'ஒ ' வை
அளபெடுத்துள்ளது. இரண்டாவது அடியில்
'ஆ' என்னும் உயிர்நெடில் தனக்கு இனமான
'அ' குறிலை அளபெடுத்துள்ளது.
      அளபெடுக்காத நிலையில், ' ஓதல்'
என்னும் சீர் 'தேமா' -வில் உள்ளது. வெண்பா இலக்கணப்படி, நின்ற சீர் 'மா' - வில் இருந்தால் வருஞ்சீரில் 'நிரை' (மாமுன்
நிரை) வருதல் வேண்டும். ஆனால்,,வரும்
சீரில் ' வேண்டும் ' என 'நேரில்' அமைக்க
விரும்பிய வள்ளுவர் , நின்ற சீரை , வரும்
சீருக்குத் தளைதட்டாமல் அமைக்கும் பொருட்டு, ஓதல் என்பதனை, 'ஓஒதல்' என
விளச்சீராக்கி ('கூ விளம் ' ஆக்கி), 
'விளமுன் நேர்' வரச்செய்து வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்துள்ளார் என்பதனை அறியவும். 
          இரண்டாம் அடியில் உள்ள, 'ஆஅதும்'
என்பதும் இவ்வகையில் அமையப் பெற்றதே. இவ்வளபெடைகள் சீரின்
இசையை நிறைவு செய்வதால் இசைநிறை 
அளபெடைகள் ஆயின.


(2) இன்னிசை அளபெடை:-
*****************************


      இன்னிசை அளபெடை என்பது, 
செய்யுளில் ஓசையோ அசையோ குறையாத போதும் அளபெடுப்பது ஆகும்.


எ-கா:-


" கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.".   (#15)


     இந்தக் குறளில், 'கெடுப்பதூஉம்' என்று
அளபெடுக்காமலே ,'விளமுன் நேர்' 
சரியாகவே அமையப்பெற்றுள்ளது.
'எடுப்பதூஉம் ' என்பதிலும் விளமுன் நேர்
அமையப்பெற்று வெண்பா இலக்கணம்
சரியாகவே உள்ளது. இருப்பினும் குறளின்
ஓசையை 'இனிமைப்படுத்துவதற்காகவே'
இவை 'காய்ச்' சீர்களாக மாற்றப்பெற்றுக்
குறளோசை, இன்னிசை பயப்பதாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
இதுவே இன்னிசை அளபெடையாகும்.



(3) சொல்லிசை அளபெடை:-
*******************************


       செய்யுளில் ஓசை குறையும்போதும்,
ஒரு பெயர்ச்சொல்லை வினையெச்சச்
சொல்லாக மாற்றுவதற்கு அளபெடுப்பது
சொல்லிசை அளபெடையாகும்.
எ-கா.


" உரனசைஇ உள்ளந் துணையாகச்
  சென்றார்;
  வரனசைஇ நின்று முளேன்.". (#1263)



        மேற்கண்ட குறளில், 'உரனைசை'
என்னும் சீரும், 'வரனசை' என்னும் சீரும்,
கருவிளச் சீர்களாக அமைந்து வெண்பா இலக்கணம் சரியாகத்தான் உள்ளன. ஆயினும், 'நசை' (விருப்பம்)
என்னும் பெயர்ச்சொற்களை,'நசைஇ' 
(விரும்பி) என வினையெச்சச் சொற்களாக
மாற்றுவதற்கென்றே இவ்விரண்டு சீர்களும் அளபெடெடுத்திருக்கின்றன.
இதைத்தான் சொல்லிசை அளபெடை என்கிறோம்.


     அளபெடுக்கும்போது, ஆ -வுக்கு 'அ'-வும்,
ஈ - க்கு 'இ' -யும், ஊ- வுக்கு ,'உ' -வும், 
ஏ- க்கு 'எ' - வும், ஐ- க்கு 'இ' -யும், ஓ- வுக்கு
'ஒ' -வும், ஔ- க்கு 'உ' -வும் அளபெடுக்கும்.


(4). ஒற்றளபெடை:- 
*********************        
       இஃது திருக்குறளில் இல்லாத வகையாகும்).



       செய்யுளில் ஓசை குறையும்பொழுது,
தனிக்குறிலை அல்லது குறிலிணையை
அடுத்துவரும் ஒற்றெழுத்து, அளபெடுத்து
ஒசையை நிறைவு செய்யும்.


எ-கா:-


" எங்ங் கிறைவனுளன் என்பாய்
   மனனேயான்,
   எங்ங் கெனத்திரிவா  ரில்."


     இக்குறள் வெண்பாவில், "எங்ங்கு
இறைவன்" என்பது, "எங்ங் கிறைவன்"
என்று ஆகி, ஓசையை நிறைந்துள்ளது.
இது, தனிக்குறிலை (எ) அடுத்துவந்த
ஒற்று (ங்) ஆனது , "ங்ங்" -என அளபெடுத்தது(அதாவது, ஒற்று இரட்டித்தது).


அடுத்து,


" இலங்ங்கு  வெண்பிறைசூ  டீசனடி
  யார்க்குக்
  கலங்ங்கு  நெஞ்சமிலை  காண்."


      இந்தக் குறள் வெண்பாவில்,
'இலங்ங்கு,  கலங்ங்கு' என்று, குறிலிணைக்கு (இல , கல) அடுத்து வந்
ஒற்றாகிய 'ங்' - , 'ங்ங்' -என அளபெடுத்துள்ளதைக் காண்க.


      மேற்கண்ட சொல்லாகிய 'இலங்கு'
என்பதில் ஒற்று அளபெடுக்காமல் இருந்தால், புளிமா- ஆகும். புளிமாவானால்,
வெண்பா இலக்கணம் தவறாகும். அதனால்
'இலங்ங்கு' என்று ஒற்று அளபெடுத்துக்
கருவிளம் ஆகி, (இலங்/ங்கு - என்றாகி) வெண்பா இலக்கணத்தை
விளமுன் நேர் எனச் சரிசெய்துள்ளது.
'கலங்ங்கு' என்னும் சீரும் இதனையே
ஒக்கும். இங்கு, ஈற்றசையாகிய 'ங்கு'
என்பது இரு குறிலெழுத்துகள் போலக்
கருதுதல் வேண்டுமென்க.


திருக்குறளில் முதல் மூன்று வகையான
அளபெடைகளும் நிறைந்துள்ளன.


இசைநிறை அளபெடைகள் மொத்தம்
ஐம்பத்து நான்கு (54) உள்ளன.


ஓர் எடுத்துக்காட்டு:-


"கற்றதனா லாய பயனென்கொல் 
  வாலறிவ
  னற்றா டொழாஅ  ரெனின்."   (#02)


இவ்வாறான அளபெடைகள் அமையப்பெற்ற குறள்களின் எண்களைக் கீழ்க்காணவும்.


                 *************
02, 12, 14, 38, 46, 55, 238, 257, 347, 653, 702,
809, 824, 840, 848, 876, 921, 933, 1052, 1053,
1059, 1070, 1087, 1088, 1090, 1097, 1098,
1104, 1108, 1115, 1143, 1176, 1194, 1198,
1200, 1204, 1210, 1245, 1292, 1295, 1301,
1305, 1324.


                       **********


(2) இன்னிசை அளபெடைகள் மொத்தம்
      முப்பத்தாறு (36) ஆகும்.


எ-கா.


" கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்
   றாங்கே
  எடுப்பதூஉ  மெல்லா  மழை."  (#15)


இதுபோன்ற அளபெடைகள் அமையப்
பெற்றக் குறள்களின் எண்கள் வருமாறு:-


                     *************


15, 31, 32, 166, 227, 230, 422, 425, 460, 461,
544, 546, 599, 641, 644, 713, 797, 812, 816,
820, 830, 845, 913, 928, 929, 931, 938, 940, 
982, 1005, 1009, 1036, 1079, 1194, 1215, 
1292- (இக்குறளில் ,'செறாஅர்' -மட்டும்).


                     *************


(3) சொல்லிசை அளபெடைகள்:-
திருக்குறளில் காணப்படும் இவ்வகையான
அளபெடைகள் மொத்தம் ஆறு (6) மட்டுமே.


எ- கா:


"இன்சொலா  லீர மளைஇப் 
படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்." (#91)


இவ்வகையான அளபெடைகள் அமையப்
பெற்ற குறள்களின் எண்கள்:-


                  *************


91, 94, 182, 660, 1040, 1263.


                  *************