தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. தொன்மை:

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.
தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும்.

எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலை எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 குறிஞ்சி முல்லை வாணர் மிகப்  பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும்,
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்
பஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.

தொன்மை:

 அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ் முன்பாலை நாடும்,
ஏழ் பின்பாலை நாடும்,
ஏழ்குன்ற நாடும்,
ஏழ்கண காரை நாடும்,
ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.
இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழியான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...

2.முன்மை:

முன்மை என்றால் முந்தி நிற்குந் தன்மை என்க...

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு... அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே...

பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்...

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே....

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
- (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்...

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்...

3. எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.


 தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை.  (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான சொற்கள் இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ஷி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

"தண்டலை மயில்க ளாடத்
 தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
 குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத் 
 தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட 
 மருதம்வீற் றிருக்கு மாதோ"

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர்.


ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக்களல்ல.

வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார்.


4. ஒண்மை (ஓளிமை);

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து, அதனை நல்வழிப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு இயற்றப்பட்ட திருக்குறளை விட, இதற்கு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர்.
அவையாவன

1. பொய் பேசுதல்,
 2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
 3. தீயசொற்களைப் பேசுதல்
 4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.

இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.

பொதுவாக , இல்லற வாழ்க்கையில், சொந்தங்களோடு கூடி வாழ்கையில் வரும் சண்டைகளில், பெரும்பான்மைச் சண்டைகள், இந்த மூன்று வகைப் பேச்சுக்களால் தான் என்பதை நாம் எளிதில் உணரலாம். இத்தகைய, வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்களும் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழ் என்று.


5. இளமை : எழில் கொஞ்சும் இளமை.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்று பாடினார், பேராசிரியர் பெரும்புலவர் மனோன்மணியம் கண்ட பெ.சுந்தரனார்..

மேற்கண்ட பாடலின் பொருள்:

தமிழ்மொழியானது, தன் வயிற்றில் இருந்து பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் இருந்தும், ஆரிய சமற்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து  சிதைந்து போகாது, இன்றும் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது எப்படியுள்ளது என்றால், பல உயிர்களைப் பல உலகங்களைப் படைத்தும் அழித்தும் செய்த செய்கின்ற எல்லாம் வல்ல இறைவன் தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது போலவுள்ளதன்றோ.. அத்தகைய தமிழின் சீரிய இளமையின் திறத்தை வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே.....(பிள்ளை பெற்றவுடன், தாய் முதுமையுறுதல் போல அல்லாமல், முன் இருந்தபடியே இளமையாய் இருக்கும் தமிழின் இளமையைப் போற்றுவது என்றவாறு)

6. வளமை - (சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை)

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,

அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,

கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.

யானையைக் குறிக்க 25 பெயர்கள் உள்ளன.

கன்று,பிள்ளை,குட்டி,குஞ்சு,சேய்,குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே.  யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க.  

அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.

7. தாய்மை; (பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை)

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர்.

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

8. தூய்மை :

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை... பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்பதனை அறிவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.

9. செம்மை - (செழுமை)

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. மக்களுக்கு ஒழுக்க வரம்பு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பு ஆகும். சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.
'என்ன செய்யுற' என்று பேசினாலும், 'என்ன செய்கிறாய்' என்றே எழுதப்படுவது நம் நடைமுறை.
இவ்வாறு இரு நிலைகளாக வேறு மொழிகளில் நடைமுறை இல்லை என்பது தமிழின் செம்மைக்குச் போதிய சான்றாம்.

தமிழில் புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல், மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல், தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய திறமையோடிருத்தலைக் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச் சொல் கன்னடத்தில் மாடுதல் என்னும் வடிவில் பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும்
 கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழ் எழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும், ரகரம் தொகல் (மறைதல்) தெலுங்கிற்கும், பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும் சிறப்பாகும்

எடுத்துக்காட்டு:

மலையாளம்: கஞ்சி - கஞ்ஞி, நீங்கள் - நிங்ங்ள், வந்து -  வந்நு...

தெலுங்கு:பருப்பு -  பப்பு, மருந்து -  மந்து

கன்னடம்: பள்ளி - ஹள்ளி, பாளை -ஹாளெ, பொன்- ஹொன்னு

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்:
ஆயிரம் -ஸகஸ்ர, கலுழன் -கருட(g), கோட்டம்- கோஷ்ட, சாயை -சாயா (ch), தூண்டம் - ஸ்தூணா, மயில் -மயூர முகம்- முக(kh) வட்டம் - வ்ருத்த.

இனனும் விரிவுக்குப், பாவாணரின் ‘செந்தமிழ்ச் சிறப்பு’ என்ற நூலைக் காண்க.


10. மும்மை (இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை)

இயல், இசை,  நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

11. இனிமை

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!

சிலம்பின் இக்கானல்வரிகளே தமிழினினிமைக்குப் போதிய சான்றாம்.


12. தனிமை :

தனித்து இயங்கும் தன்மை.

இது வேறெம்மொழிக்கும் இல்லாத தமிழின் தனிப்பெருஞ் சொத்தாகும்.

தமிழ் மொழியானது வேறு எந்த மொழியின் சொற்களைப் பயன்கொள்ளாமல் தனித்து இயங்கும் தன்மை கொண்ட ஒரே மொழியாகும்.

 ‘மற்ற மொழிகளில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர, அதன் வளம் பெருகும். தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர அதன் வளம் குன்றும்.’

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப்பகைவர்கள் சிலர், ‘தனித்தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி தக்கதாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்?

அட்காக் கமிட்டி, லோக் சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக் கேடானது. வடமொழிச் சொற்களையும் நன்கு பலுக்கும் தமிழனுக்குத் ‘தமிழ் பலுக்க வராது‘ எனக் கூறுவது மானக்கேடாகும்."
தமிழின் சிறப்பு என்ற நூலில் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறியது.


13. நுண்மை :

தமிழின் நுண்மைக்கு, உயிரும் மெய்யும் என்று எழுத்துகளை வகைப்படுத்தியது தொடங்கி கணக்கிலா சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ.

தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியலின் சுருக்கம்:

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப.

என்று மெய்ப்பாடுகள் (மெய் படும் பாடுகள்) எட்டே என்று குறித்ததோடு...

*அவற்றுள் நகை என்பது...

"எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு' என்ப"

என்று நான்கு வழி வருவதே நகை என்றும்...
 
*அழுகை என்பதோ...

"இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே"

*இளிவரல் என்னும் இழிவுறுதல்.  இகழ்வுறுதல் என்பதோ...

மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

*மருட்கை எனப்படும் வியப்புறுதல் என்பதோ...
 
"புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே."
 
*அச்சம் என்பதோ...

அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
 
*பெருமிதம் என்பதோ...

கல்வி, தறுகண், புகழ்மை, கொடை, எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
 
*வெகுளி எனப்படும்  சினத்தல் என்பதோ

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

*உவகை என்பதோ
 
செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.

இவ்வாறான நுட்பமான உளவியல் வரையறைகளை, தன் முதுபழம் நூலான தொல்காப்பியத்துள் வைத்துக் காட்டுவதே, நம் தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

14. திருமை - 'திரு' என்னும் அடை பொருந்தும் தன்மை, தெய்வமாகிய தன்மை.

இன்றைய அளவில், தமிழரைக் காப்பாற்ற, தமிழை விட வேறு தெய்வம் இல்லை என்க.

திருமைக்கு அழகு என்றும் பொருள்.


15. இயன்மை - இயல்பான தன்மை...

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காக படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி... தேவபாடை என்பது போன்றது அல்லாமல் இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால்   உருவானது என்க...
(சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன... தமிழைத் தோற்றுவித்தார் எனப் பாடப்படவில்லை...)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல் அதாவது ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்...


16. வியன்மை - உலகெங்கும் பரவியுள்ள தன்மை ...  சில தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன... எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.

இவையே பாவாணர் தமிழின அரும்பண்புகளாகக் கண்டு சொன்ன பதினாறு குணங்களாகும். நன்றி...


மேலும் படிக்க »

வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள்


சொற்றொடர்களில் வல்லெழுத்துக்களான "க், ச், த், ப்," மிகுந்து வருதலையே சுருக்கமாக வலிமிகுதல் எனப்படுகிறது. வலிமிகுதலால் சொற்றொடர்களில் பொருள் வேறுபாடு உண்டாகும். "தந்த பலகை" என்னும் தொடருக்கும் "தந்தப் பலகை" என்னும் தொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
தந்த பலகை என்பது கொடுத்த பலகை என்றும், தந்தப் பலகை என்பது தந்தத்தால் ஆன பலகை என்று பொருள்படும்.

🌹🌹

 வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள். 1 - 14
1) அ, இ, எ, இந்த, எந்த, அங்கு, இங்கு, ஆங்கு, இங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு, அப்படி, இப்படி, எப்படி,
ஆகிய சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
அ+காட்சி = அக்காட்சி
இ+படம் = இப்படம்
எ+சங்கம் =எச்சங்கம்
அந்த+பையன்=அந்தப் பையன்
பாதி+துணி= பாதித்துணி

 2) வந்தொடரக் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
பட்டு + புடவை=
பட்டுப்புடவை
விற்று + தந்தார்  = விற்றுத் தந்தார்

3) நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வலிமிகும்

 எ.காட்டு

கனா + கண்டான் = கனாக் கண்டான்
பலா + பழம் = பலாப்பழம்
4) முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
முழு + பாடல் = முழுப்பாடல்
நடு + தெரு = நடுத்தெரு

5) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்

எ.காட்டு
பேசா - பையன்= பேசாப் பையன்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை

 6) அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகும்.

எ.காட்டு
செய்ய + சொல் = செய்யச்சொல்

ஆட + கண்டான் = ஆடக் கண்டான்
ஆடி + பாடினான் = ஆடிப் பாடினான்

 7) ஆய், போய் என முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்
எ.காட்டு
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
வருவதாய் + கூறினான்=
வருவதாய்க் கூறினான்


8) இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) க்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
மானை + பார் = மானைப் பார்
நாயை + துரத்து = நாயைத் துரத்து

9) நான்காம் வேற்றுமை உருபு (கு) க்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச் சென்றான்
அவனுக்கு + கொடு = அவனுக்குக் கொடு

 10) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும். (நிலைமொழியில் ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய, ஆகியவை மறைந்து நிற்கும்)

எ.காட்டு
நாய் + குட்டி = நாய்க்குட்டி
யானை + தந்தம் = யானைத் தந்தம்
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்

11) உவமைத் தொகையில் வலிமிகும். ( உவமை உருபுகளான போல, போன்ற, ஒப்ப, நிகர முதலியவை நிலைமொழியில் மறைந்து நிற்கும்)

எ.காட்டு
மலை + தோள் = மலைத்தோள்
மலர் + கை = மலர்க்கை

 12) பண்புத் தொகையில் வலிமிகும்.
எ.காட்டு
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
சதுரம் + பலகை = சதுரப்பலகை

 13) நிலைமொழி சிறப்பு பெயராகவும், வருமொழி பொதுப் பெயராகவும் வரும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலிமிகும்.

எ.காட்டு
தை + திங்கள் = தைத்திங்கள்
பலா + பழம் = பலாப்பழம்

14) ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
தீ + சட்டி = தீச்சட்டி
கை + குட்டை = கைக்குட்டை
பூ + கூடை = பூக்கூடை



இவை வலிமிகும் இடங்களைக் கண்டு கொள்ள எளிய வழிகள்...
மூன்றாவதற்கும் பதினான்குக்கும் விலக்குகள் உள்ளன... மற்றவற்றை முடிபாகக் கொள்ளலாம்... நன்றி...
மேலும் படிக்க »

மிதிவண்டி - தமிழ்ச் சொற்கள்

ஒரு மிதிவண்டியில் இத்தனை உதிரி பாகங்களா ? அத்தனைக்கும் தமிழில் சொற்கள் உண்டு . அறிந்து கொள்வோம் !

மிதிவண்டி - தமிழ்ச் சொற்கள்
----------------------------------------------

Tube - மென் சக்கரம் (முடிவில் பார்க்கவும்)
Tyre - வன் சக்கரம் (முடிவில் பார்க்கவும்)
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை ; Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

- முனைவர் அண்ணாகண்ணன்

◆ பி.கு

Tyre - வட்டகை / உருளிப்பட்டை
Tube - காற்றுக் குழாய் / தூம்பு என்பதே மிகச்சரியானது.

நன்றி: திரு.இராசகுமார் சண்முகம்
மேலும் படிக்க »

தமிழில் வேர் சொற்கள் எப்படி உருவாயின ?

சுட்டடி வேர் பெரும்...மூலமாக...அமைந்துள்ளது. ஒப்பொலிச் சொல்லாக்கம் வழியும் சொல் உருவாகும். ஊராகச் சுட்டின் வாயிலாக பெரும் பகுதி சொற்கள் உருவாகியுள்ளன.

எ.கா.
அ, இ, உ சுட்டொலி.

க், ச், த், ப், ஞ், ந், ம், முதலிய மொழிமுதல் மெய்கள் ஊகாரச் சுட்டுடன் சேர்கையில் வித்து உருவாகும்.

உ> உல்> க்+உல்= குல்
குல்= கூடல், வளைதல், குத்தல் கருத்து வேர்.

குல்>குலம்.
குலம்= கூடி வாழும் மக்கட் கூட்டம்.

அல், இல், உல் இவையே மூல வேர்கள். இவற்றைப் பிளந்தால் ஊகாரமே மரபணு வேராக நிற்கும்.

ஆ, ஈ, ஊ அண்மை, முன்மை, சேய்மை சுட்டு வேர்கள். இவை மூல உணர்ச்சியொலிகளாகும்.

ஆ > சேய்மை
ஈ> அண்மை
ஊ> முன்மை

ஆ = சீற்றம்
ஈ= இழிவு, மகிழ்வு

ஊ= துன்பம்

பன்னிரண்டு உயிர்கள் உருவாக்கம்.

ஆ~ ஈ~ஊ} மூல உயிர்கள் 3.

ஆ>அ
ஈ>இ
ஊ>உ
 குறிலாய்த் திரிய 6 ஆகின.

ஈ> ஏ எனத் திரியும்.
ஊ> ஓ நெடிலெனத் திரியும்.

ஏ> எ எனவும்
ஓ > ஒ எனவும்
 குறிலாகி மொத்தம் பத்து உயிர்கள் உருவாகின.

பின்னர்,
அ+இ= ஐ

அ+உ= ஔ எனப் புணரொலிகள் தோன்றி பன்னிரண்டு உயிர்களும் உருவாகின.

// /
அரங்கன் ஐயா  : குழந்தைகள் முதலில் நெடில் உயிர்களையே சொல்லமுடிவது போல அல்லவா ஐயா...

திரு வளவன் ஐயா  : ஆம்...ஆம்..தமிழ்...இயற்கை மொழி.

அரங்கன் ஐயா :என் இரு மகள்களுக்கும் ககரம் பலுக்க வர மூன்றாண்டுகளாயிற்று... இன்னமும் கூடச் சிறியவளுக்கு வரவில்லை (நாலாண்டு முடியப்போகிறது) இவ்வாறே தமிழின் தோற்றத்திலும் முதலில் எளிய எழுத்துகளும் பிறகே அனைத்தும் உருவாயின என்பதேதாமே ஐயா..

திரு வளவன் ஐயா : மிகச் சரி. கூர்தலறம்...அவ்வாறே.///

மம் மம்> மம்மம் குழவி வளர்ப்பொலி

மா> மா ஆஅ> அம்மா
தாயின் மார்பில் பால் குடிப்பன எழுப்பிய மூல ஒலி.
இது மென்மை.
வன்மையாயின்...அப்பா என்றாகும்.

ங்கா என்பதும் குழவி வளர்ப்பொலி தானே ஐயா... அருமை....

இங்ஙா....குழவி வளர்ப்பொலியே. குழந்தை அழும் பொழுது எழும் ஒலி. பசிப்பதால் அழுவதாகக் தாய் கருதுவாள். எனவே குழந்தையின் பாலுக்கு இங்ஙா எனும் குழவி வளர்ப்பொலிச் சொல் உருவாகிற்று.

இதனால்தான் தமிழல்லாத மொழிவழி மொழிவரலாறு காண முயல்வது காட்டுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு செல்வது என்பார் பாவாணர் .

Culture என்ற சொல்லுக்கு ஆங்கில அறிஞர்கள் மூலத்தைக் காணவேண்டும் என்றால் தமிழைப் படிக்காது முடியாது...

அதனாற்றான்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ் என்றனர்... வேறு மொழிகளுக்கு இது போன்று பாடவும் முடியாது.. கூறவும் முடியாது...

ஐயப்பாடு : புதிய வேர் சொற்களை நாம் உருவாக்க கூடாதா?

புதிய வேர்கள் உருவாகா. மொழிஞாயிறு ஞா.தேவ நேயப் பாவாணரின் முதற்றாய் மொழி...காண்க.
மேலும் படிக்க »

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் அறிவுறுத்தல்



அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அன்னாரின் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைச் செய்து முடிப்பதே....

. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை

(1) சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு, மொழியியற் கலைநாகரிகத் தன்னாட்சி (Linguistic and Cultural Autonomy) அமைத்தல்.

(2) தனித்தமிழ்ப் பற்றும் தமிழிலக்கிய வறிவும் உள்ள ஆசிரியரையே கல்வியமைச்சராக அமர்த்துதல்.

(3) தனித்தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உள்ளவராய் ஓய்வு பெற்றுள்ள, கல்வித்துறை யியக்குநர், பெருங்கல்லூரி முதல்வர், தலைமைப் பேராசிரியர் ஆகியோரையே, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துணைக் கண்காணகராக (Vice-Chancellors) அமர்த்துதல்.

(4) இருவகை வழக்குத் தமிழ்ச்சொற்களையும் அறிந்தவரும் வண்ணனை மொழியியலையன்றி வரன்முறை மொழி நூலையே கடைப்பிடிப்பவரும், வடமொழியிந்தித் தாக்குதலினின்று தமிழைக் காப்பவரும், உண்மையையுரைக்கும் திண்மையுள்ள வருமான தமிழ்ப் பேராசிரியரையே, சென்னை அண்ணாமலை மதுரையாகிய முப்பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறைத் தலைவராக அமர்த்துதல்.

(5) தமிழுக்கு மாறாக வேலைசெய்யும் தமிழாசிரியர், தலைமை யாசிரியர், முதல்வர், துணைக் கண்காணகர் ஆகியோரைப் பதவியினின்று நீக்குதல்.

(6) இந்தியால் தமிழ் கெடுவது திண்ணமாதலால், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டத்தையே கல்வி, ஆள்வினை (Administration), வழக்குத்தீர்ப்பு ஆகிய முத்துறையி லும் எல்லா மட்டத்திலும் கையாளுதல்.

(7) தமிழ்ப்பற்றற்ற பிராமணத் தமிழ்ப்பண்டிதர் கொண்டான்மாரைத் துணைக்கொண்டு தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி என்னும் கலவைமொழி அகரமுதலியை உடனே திருத்துதல்.

(8) தமிழ்நாட்டு உண்மை வரலாற்றை எழுதுவித்துப் பாடமாக்கலும், தமிழ்ப்பகைவரால் எழுதப்பட்ட பொய் வரலாற்றைப் புறக்கணித்தலும்.

(9) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை முழுநிறை வாக உருவாக்குதல்.

(10) செம்மையான ஆங்கிலத் தமிழகரமுதலி யொன்று தொகுப்பித்தலும், கலையறிவியல் கம்மியக் குறியீடு களைத் தூய தமிழில் மொழிபெயர்த்தலும்.

(11) பேராயக்கட்சியாளர் தொகுத்த கலைக்களஞ்சிய நடையை யும், அதிலுள்ள தமிழைப்பற்றிய தவறான கருத்துகளையும் திருத்துதல்.

(12) அச்சிற்கு வராத தமிழ்ச்சொற்களையும் தமிழ் ஏட்டுப் பொத்தகங்களையும் தக்க அறிஞரைக்கொண்டு தொகுப்பித்தல்.

(13) கல்வெட்டுத் தொகுப்பும் வெளியீடும் தக்க தமிழறிஞரைக் கொண்டு செய்வித்தல்.

(14) பாடப்பொத்தகங்களைத் தூய தமிழில் எழுதுவித்தலும், தூய தமிழ் நூல்களை வெளியிடும் கழகங்களை ஊக்கு தலும்.

(15) தூய தமிழிற் பேசும் மாணவர்க்கும் தூய தமிழிற் சிறந்த நூலியற்றும் அறிஞர்க்கும் பரிசளித்தல்.

(16) ஆட்பெயர், இடப்பெயர், பொருட்பெயர், பட்டப்பெயர், சிறப்புப்பெயர் ஆகிய எல்லாப் பெயரையும் தூய தமிழாக்கல்.

(17) இலக்கணம், இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பழந்தமிழ் அறிவியல்களையும் கலைகளையும் முன்போல் தூய்மைப்படுத்துதல்.

(18) அரசினர் அறிவிப்புகளும் விளம்பரங்களும் எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையுமின்றி வெளிவரச் செய்தல்.

(19) தமிழையும் பதினெண் திரவிட மொழிகளையும் ஒருங்கே கற்பிக்கும் ஒரு கல்லூரி நிறுவுதல்.

(20) தமிழ்ப்பற்றுள்ளவரையே, சட்டசவை பாராளுமன்ற வேட்பாளராகத் தெரிந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கவும் செய்தல்.

(21) வண்ணனை அடிப்படையிலன்றி வரலாற்றடிப் படையி லேயே மொழி நூலை வளர்த்தல்.

(22) கோயில்வழிபாடும், இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெறச் செய்தல்.

(23) தமிழுக்காக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வாழ்க்கை நடைப்பொருள் அளித்தல்.

(24) தமிழ்ப்பற்றாற் பதவியிழந்தோரைப் பின்னோக்கிய வலிமை யொடு (Retrospective effect) மீண்டும் பதவியில் இருத்துதல்.

(25) வருவாயற்ற பெருந்தமிழ்ப் புலவர்க்கு உதவிச் சம்பளம் அளித்தல்.

(26) தமிழுணர்ச்சியைப் பரப்பிப் பொதுமக்கட்குத் தமிழறிவு புகட்டும் தனித்தமிழ் இதழ்கட்குப் பொருளுதவி செய்தல்.

(27) மேனாட்டாரைத் துணைக்கொண்டு, தென்மாவாரியில் ஆழ மூழ்கிப் பழம்பொரு ளெடுத்தாராய ஏற்பாடு செய்தல்.

(28) அலுக்கிற்கும் அளபெடைக்கும் போதிய இடைவெளி விட்டு, இம்மியும் பிசகாது தியாகராசையத் கீர்த்தனைகள் போன்றே இன்பமாய்ப் பாடக்கூடிய உயரிய மெட்டுப் பாடல்களை அறிவும் ஒழுக்கமும் தழுவிய பொதுப் பொருள்கள்பற்றி, இயற்றித்தரும் இசைவாணர்க்கும் பாவலர்க்கும் சிறந்த பரிசளித்தல்.

(29) ஊர்காவலர் படைத்துறையினர் உடற்பயிற்சியும் மெய்க் காட்டும் (parade), தமிழ் ஏவற் சொற்களைக் கொண்டு நடப்பித்தல்.

(30) கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இறுதியில் உலக வாழ்த்துப் பாட்டுத் தமிழிற் பாடல்.

(31) மறைமலையடிகள், (P.T.) சீநிவாசையங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவர்க்கும் சென்னையில் படிமை நிறுவுதலும், அம் மூவர் முழுவுருவப் படங்களையும் முதன்மையான அரசியல் அலுவலகங்களிலும் பொதுக் கூடங்களிலும் மாட்டி வைத்தலும்.

(32) செய்யுட்கே சிறப்பாக வுரிய இலக்கணக் கூறுகளை நீக்கி விட்டு, உரைநடை யிலக்கணத்தைமட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிப் பொதுத்தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைத்தல்.

(33) இகரத்தின் நெடிலைக் குறித்தற்கு, இடைக்காலத்தில் ஆரியராற் புகுத்தப்பட்ட. வாயிற்கால்போன்ற கிரந்த வரிவடிவை நீக்கிவிட்டு, இறுதியிற் சுழிகொண்ட பழைய இகர வடிவையே கையாளுதல்.

(34) இங்கிலாந்தில் 1875ஆம் ஆண்டிற் செய்தவாறு, தமிழ் நாட்டில் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைச் சட்ட வாயிலாய்ப் புகுத்துதல்.

(35) அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறைத் தொடக்கவிழாத் தலைவர் பர். சட்டர்சியின் அச்சிட்ட (தமிழுக்கு மாறான) தலைமையுரையை, அக் கழகத்தி னின்று அகற்றுதல்.

(36) பர் சட்டர்சியும் பர்.கத்திரேயும் இந்திய ஞாலநூலியல் வரலாறு-முதன்மடலத்தில் (Gazetteer of India - Vol. I) தமிழைப் பற்றி வரைந்துள்ள தவறான கருத்துகளைத் திருத்துதல்.

தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை

(1) உண்மையான தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் வெளி யிட்டு உலக முழுதும் பரப்புதல்.

(2) வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச்சொற்கள், நூல்கள், கலைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றை ஆராயுமாறு, தக்க ஆராய்ச்சி யாளரைக் கானா, எகிபது, பிரனீசு, மலைநாடு, மெகசிக்கோ (Mexico), காம்போதியா, சையாம், மலேயா, சாலித்தீவு முதலிய நாடுகட்கு அனுப்புதல்.

(3) வெளிநாடுகளுடன் போன்றே, இந்திய நடுவணரசோடும் பிற இந்திய மாநிலங்களோடும், எழுத்துப் போக்குவரத்து ஆங்கிலத்திலேயே நடத்துதல்.

(4) ஒவ்வொரு பெருநாட்டிலும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் பதவி ஏற்படச்செய்தல்.

(5) தமிழ்மொழி நாகரிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு விடைமுகவர் குழுவை (Delegation), உலகஞ் சுற்றிவரச் செய்தல்.

(6) தமிழர் பெருந்தொகையினராயுள்ள இலங்கைபோன்ற வெளிநாடுகளில், இந்தியத் தூதாண்மைக் குழுவில், தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுள்ள தூய தமிழர் ஒருவரும் இருக்கச் செய்தல்.

(7) ஆக்கசுப்போர்டு (Oxford) ஆங்கில அகரமுதலியிலும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திலும(Encyclopaedia Britanic) தமிழைப் பற்றிய தவறான குறிப்புகளையும் கூற்றுகளையும் உடனே திருத்தச்செய்தல்.

இவற்றோடு செய்ய வேண்டியன பல இருந்தாலும், மொழியளவில்,....

திராவிட மொழிக்குடும்பம் என்ற சொலவடையை மாற்றித் 'தமிழிய மொழிக் குடும்பம்' என்று உலகறிய நிருவி மாற்றிடச் செய்யவேண்டும் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம்....
மேலும் படிக்க »

முகம் ? மூஞ்சி ?

முகம் என்றால் என்னவோ..? மூஞ்சி என்றால் என்னவோ..?
முகம் - மாந்தன்
மூஞ்சி- விலங்கு
மூஞ்சி என்பது மூக்கும் வாயும் மட்டும்
முகம் என்பதோ முகமொத்தமும்...
விலங்குகளுக்கு மூக்குவாய் சற்று முன்னோக்கித் தள்ளப்பட்டிருக்கும்...
கண்ணோடும் செவியோடுஞ் சேர்ந்த மூஞ்சியே முகம் என்பார் பாவாணர் ஐயா...
மேலும் படிக்க »

துன்ப வகைப்பாடு

துன்பம் :

இல்லாது போனதால் உண்டாகுந் துன்பம் = அல்லல்.

தொலைவில் போனதால் உருவாகுந் துன்பம் = தொல்லை.

நெருங்கி இருப்பதால் உண்டாகுந் துன்பம் = நெருக்கடி.

இவற்றில் அந்தந்த சொல்லை தகுந்த இடங்களில் எடுத்து ஆளலாம் ..

- அரங்கன் ஐயா
மேலும் படிக்க »

அறம் பொருள் இன்பம் : வள்ளுவர் மாண்பு

அறம் பொருள் இன்பம் :

தமிழர் தம் வாழ்வில் கொண்டொழுகு பற்றுறுதிகள் மூன்று... அவை அறம், பொருள், இன்பம் என்பவையாம்.

இவற்றின் பொருள் என்ன?

பரந்து விரிந்த, ஆழ்ந்து அகன்ற, பொருள் தரும் இச்சொற்களின் வரையறையை, மணிச்சுருக்கமாக வள்ளுவர் உரைக்கும் மாண்பினைக் காண்க...

அறம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம் #34

அஃதாவது, மனத்தில் மாசு இல்லாது இருக்கும் நிலையே அறமாகும். அவ்வளவே.

பொருள் :

திறனறிந்து தீதின்றி வந்த பொருள் #754

செய்யும் திறப்பாட்டினை அறிந்து, தீய வழிகளல்லாத நல்வழிகளில் வருவதே பொருள்

இன்பம் :

அறத்தான் வருவதே யின்பம் #39

அறம் வழி நின்று வாழ்தலால் வருவதே இன்பமாகும்.


என்னே வள்ளுவர் மாண்பு!!!

- அரங்கன் ஐயா 
மேலும் படிக்க »

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள்

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு
மேலும் படிக்க »

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் எளிதாக பயில
1 க"டுகு
2 உ"ளுந்து
3 ங"னைச்சு
4 ச"மைச்சு
5 ரு"சிச்சு
6 சா"ப்பிட்டேன்
7 எ"ன்று
8 அ"வன்
9 கூ"றினான்
0 ஓ"என்றேன்
மேலும் படிக்க »

ஏகாரமும் உம்மையையும் : அரங்கன்

ஒரே எழுத்தைக் கொண்ட சொல்லான ஏ எனும் இடைச்சொல்லை நம்மாட்கள் எந்தெந்த வகைகளிலெல்லாம் பயன்கொள்கின்றனர் என்பது பெரிதும் வியப்புக்குரியது அல்லவா .

நான் ஒரு புலவன்
நானே புலவன்
நான் புலவனே
நான் ஒரே புலவன்
நானே ஒரே புலவன்

ஏகாரம் செய்யும் விந்தைகளைக் காண்க.

ஏகாரம் மட்டுமன்று உம் எனும் உம்மையையும் மற்ற இடைச்சொற்களும் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது பாவலர்க்கு மிகத் தேவையானவொன்று.

என்னை உயர்வாகக் கருதினார்
என்னையும் உயர்வாகக் கருதினார்
என்னை உயர்வாகவும் கருதினார்
என்னை உயர்வாகக் கருதவும் செய்தார்
அவரும் என்னை உயர்வாகக் கருதினார்.

இவற்றின் வேறுபாட்டை உணர்க.

பலவேளை பத்து இருபது சொற்கள் சொல்லும் சேதியை ஒரே ஒரு இடைச்சொல் சொல்லிவிடும்...  இடைச்சொற்கள் இருமுனைக் கத்தியைப் போன்றவை என்பதும் கருதவேண்டிய வொன்று...

எடுத்துக்காட்டுக்கு...

எனக்குத் தெரியாது. தாங்களும் முயல்க...

எனக்கே தெரியாது. தாங்களும் முயல்க...

இவ்விரண்டிற்குள் உள்ள வேறுபாடு என்ன...

1. எனக்குத் தெரியாது என்பது உண்மையான ஒப்புதல்.                                                                                                                                                     2. எல்லாம் தேரிந்த எனக்கே தெரியவில்லை என்பது போன்ற ஓர் ஆணவம்.

ஆம்... அது மட்டுமா... முதலில் வரும் தாங்களும் முயல்க என்பதின் உம்மை நான் முயன்றேன் என்பதைச் சொல்கிறது...

இரண்டாவதில் வரும் உம்மையோ... நீ என்ன செய்யப் போகிறாய் என்கிறது...
"எனக்குத் தெரியாது. தாங்கள் முயல்க" என்பதோ இவர் முயற்சியே செய்யவில்லை.. செய்ய விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது...

நன்றி

மேலும் படிக்க »

நூல் ஆசிரியர் காலம் இலக்கண வகை: அரங்கன்

தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐம்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும் என்பதை நாம் அறிவோம்.

தமிழில் இலக்கண நூல்கள் பற்பல பற்பல. அவற்றுள் எண்ணிலடங்காதவை அழிவுற்றன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எஞ்சியதுள் கிடைத்தவை ஐம்பதுக்கும் மேற்பட்டவை. அவற்றுள் சிறப்பான இலக்கண நூல்களின் விவரங்கள் இதோ.

நூல்
ஆசிரியர்
காலம்
இலக்கண வகை

1. தொல்காப்பியம்
தொல்காப்பியர்
கி.மு.4ஆம் நூற்.
எழுத்து, சொல், பொருள் (செய்யுளியலில் யாப்பும் உவமையியலில் அணியும் உள்ளதனால் ஐந்திலக்கணமுமாம்)

2. நன்னூல்
பவணந்தி முனிவர்
13ஆம் நூற்.
எழுத்து, சொல்

3. நேமிநாதம்
குணவீர பண்டிதர்
12ஆம் நூற்.
எழுத்து, சொல்

4. இறையனார் களவியல்
---
7ஆம் நூற்.
அகப்பொருள்

5. நம்பியகப் பொருள்
நாற்கவிராசநம்பி
13ஆம் நூற்.
அகப்பொருள்

6.மாறனகப் பொருள்
குருகைப்பெருமாள் கவிராயர்
16ஆம்நூற்.
அகப்பொருள்

7.புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார்
9ஆம் நூற்.
புறப்பொருள்

8. யாப்பருங்கலம்
அமிர்தசாகரர்
10ஆம் நூற்.
யாப்பு

9. யாப்பருங்கலக் காரிகை
அமிர்தசாகரர்
10ஆம் நூற்.
யாப்பு

19.தண்டியலங்காரம்
தண்டி
12ஆம் நூற்.
அணி

20. மாறன் அலங்காரம்
குருகைப்பெருமாள் கவிராயர்
16ஆம் நூற்.
அணி

21. வீரசோழியம்
புத்தமித்திரர்
11ஆம் நூற்,
ஐந்திலக்கணம்

22. இலக்கண விளக்கம்
வைத்தியநாத தேசிகர்
17ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

23. தொன்னூல் விளக்கம்
வீரமாமுனிவர்
!18ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

24. சுவாமிநாதம்
சுவாமி கவிராயர்
18ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

25. அறுவகை இலக்கணம்
தண்டபாணி சுவாமிகள்
19ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

26. முத்துவீரியம்
முத்துவீர உபாத்தியாயர்
19ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

27. பன்னிரு பாட்டியல்
---
10ஆம் நூற்.
பாட்டியல்

28. வெண்பாப் பாட்டியல்
குணவீர பண்டிதர்
12ஆம் நூற்.
பாட்டியல்

29. இலக்கண விளக்கப் பாட்டியல்
தியாகராச தேசிகர்
17ஆம் நூற்.
பாட்டியல்

மேலும் படிக்க »

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகிய தமிழ்!


உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகிய தமிழ்!

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு, வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துகள்: 12
மெய் எழுத்துகள்: 18
உயிர்மெய் எழுத்துகள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துகள் மொத்தம்: 247

நம்மொழிக்குத் தமிழ் என்று எப்படிப் பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை¬த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

ஓர் எழுத்து ஒரு சொல் ! 

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தியிரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல்லாக உள்ளன.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற பொருளோடு பார்ப்போம்.

ஆ - பசு 
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல் 
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு 

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் வியப்பு உங்களுக்குத் தெரியும். இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள். மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த வியப்புக்குரிய செய்தி.

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்குத் தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்குத் தோன்றிய ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்க்கடைசசங்கத்தில் அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் கடைச்சங்கம் தான் தமிழின் கடைசிச் சங்கம். அந்தக் கடைசிச் சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்...?!

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோ அகத்திய இலக்கணத்தைத் தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர்..?! தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

இதில் இன்னும் முகாமையானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரிக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக்கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன் தமிழன் என்று. !!!
மேலும் படிக்க »