ஏகாரமும் உம்மையையும் : அரங்கன்

ஒரே எழுத்தைக் கொண்ட சொல்லான ஏ எனும் இடைச்சொல்லை நம்மாட்கள் எந்தெந்த வகைகளிலெல்லாம் பயன்கொள்கின்றனர் என்பது பெரிதும் வியப்புக்குரியது அல்லவா .

நான் ஒரு புலவன்
நானே புலவன்
நான் புலவனே
நான் ஒரே புலவன்
நானே ஒரே புலவன்

ஏகாரம் செய்யும் விந்தைகளைக் காண்க.

ஏகாரம் மட்டுமன்று உம் எனும் உம்மையையும் மற்ற இடைச்சொற்களும் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது பாவலர்க்கு மிகத் தேவையானவொன்று.

என்னை உயர்வாகக் கருதினார்
என்னையும் உயர்வாகக் கருதினார்
என்னை உயர்வாகவும் கருதினார்
என்னை உயர்வாகக் கருதவும் செய்தார்
அவரும் என்னை உயர்வாகக் கருதினார்.

இவற்றின் வேறுபாட்டை உணர்க.

பலவேளை பத்து இருபது சொற்கள் சொல்லும் சேதியை ஒரே ஒரு இடைச்சொல் சொல்லிவிடும்...  இடைச்சொற்கள் இருமுனைக் கத்தியைப் போன்றவை என்பதும் கருதவேண்டிய வொன்று...

எடுத்துக்காட்டுக்கு...

எனக்குத் தெரியாது. தாங்களும் முயல்க...

எனக்கே தெரியாது. தாங்களும் முயல்க...

இவ்விரண்டிற்குள் உள்ள வேறுபாடு என்ன...

1. எனக்குத் தெரியாது என்பது உண்மையான ஒப்புதல்.                                                                                                                                                     2. எல்லாம் தேரிந்த எனக்கே தெரியவில்லை என்பது போன்ற ஓர் ஆணவம்.

ஆம்... அது மட்டுமா... முதலில் வரும் தாங்களும் முயல்க என்பதின் உம்மை நான் முயன்றேன் என்பதைச் சொல்கிறது...

இரண்டாவதில் வரும் உம்மையோ... நீ என்ன செய்யப் போகிறாய் என்கிறது...
"எனக்குத் தெரியாது. தாங்கள் முயல்க" என்பதோ இவர் முயற்சியே செய்யவில்லை.. செய்ய விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது...

நன்றி